வரும் வழியெங்கும் பல பல கேள்விகள் அனைவரின் மனதிலும் எழுந்து நின்றது மலையென…
தட்சேஷ்வர்…. ஜெய்யை தன் விழிகளுக்குள் கண்ட விதம், இன்னமும், அவரின் மனதில் நிழலாட, அந்த பொன் தாலி அவருக்குள், மகள் தன்னையே எதிர்த்து சூளுரைத்ததையும், தன் முன்னாலேயே இருவரும் திருமண பந்தத்தில் இணைந்ததையும் விளக்க, முற்றிலுமாய் குழம்பி போனார் அவர்…
இது ஏன்?.. எதற்காக நடக்காத ஒரு நிகழ்வு, நடந்ததை போன்ற தோற்றத்துடன் தன் கண்களுக்குள் உதயமானது?... எனில் இது நடக்க விருக்கிறதா?...
தான் உயிரோடிக்கும்வரை அப்படி ஒரு சம்பவம் நடந்திட கூடாது என்பதில் மட்டும் தெளிவாய் இருந்தார் அவர்… ஆம்… ஜெய் தனக்கு மாப்பிள்ளையாவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றே எண்ணியது அவர் மனமும்….
பிரசுதி… தன் மகள் சதியின் அருகாமை, அதுவும் ஜெய்யின் அருகில் இருந்ததை எண்ணிப்பார்த்து மகளின் மனதை புரிந்து கொள்ள முயல, ஜெய்யின் கைகளில் இருந்த தாலி, அவருக்கு எதையோ நினைவுபடுத்துவது போலேயே இருக்க, அது என்ன என்று யோசிக்கலானார் அவர்…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
எத்தனையோ முயற்சித்தும், அவரால் விடையை நெருங்க முடியாது போகவே, மகளின் மனதில் என்ன தான் இருக்கிறது என ஊர் சென்று சேர்ந்ததும் தெரிந்து கொள்ள விரும்பினார்…
சதி மறைக்காமல் உண்மையை தன்னிடம் கூறுவாளா?... என்ற கேள்வியும் அவருள் எழ, அதிலேயே உழன்ற படி தன் வீட்டுற்குள் நுழையும் தருணத்தினை எதிர்பார்த்து காத்திருக்க,
மறுபுறமோ, சிதம்பரத்திற்கும், காதம்பரிக்கும், சில விஷயம் தெளிவாகப் புலப்பட்டது… அது ஜெய்-சதி இருவரும் ஒருவரை ஒருவர் மனமார நேசிப்பதும், அதற்கு தட்சேஷ்வர் எதிர்ப்பு தெரிவிப்பதும் அவர்களுக்கு வெட்ட வெளிச்சமாக மனதில் பதிய, ஏன் தட்சேஷ்வர் மறுப்பு தெரிவிக்கிறார்?? என்ற காரணம் மட்டும் அவர்களுக்கு கிட்டிடவில்லை…
மௌனமாக காரை ஓட்டிக்கொண்டிருக்கும் ஜெய்யின் மீது அவ்வப்போது பார்வையை பதித்துக்கொண்டே வந்த இஷானுக்கு இன்னமும் அங்கே கண்ட காட்சியில் மெய் சிலிர்த்தது….
சதியின் பக்கம் ஜெய் திரும்பிக்கூட பார்த்ததாய் இஷானுக்கு நினைவில்லை… தன் தங்கை அவனை விழிகளில் நிறைத்து மகிழ்ந்து கொள்வதையும், அவனின் காதலுக்காக ஏங்கி நின்றதையும் கண் கூடாக கண்டவன், ஜெய்யின் மனதில் சதியின் மேல் இப்படியும் ஓர் காதல் இருந்திருக்கக்கூடும் என்று கனவிலும் கண்டதில்லை…
அவனின் அந்த ருத்ர தாண்டவம், அவளை இழந்துவிட்டோமோ என்ற பரிதவிப்பு, உயிரை துச்சமென எண்ணி நெருப்பில் நடனம் புரிந்தது, தன்னவளை விட்டுவிட்டு வாழ எண்ணம் கூட இல்லாது தன் உயிரையும் அதே நெருப்பில் மாய்த்துக்கொள்ள இருந்தது…
இந்த காதல் அனைத்தும் எப்படி வந்தது அவனுக்குள்?... தன் தங்கை அவனின் மனதில் இவ்வளவு ஆழம் பதிந்து, ஊனாய், உயிராய் கலந்திருப்பதின் மர்மம் என்ன?... அவனின் கையில் வைத்திருந்த தாலியைக் கண்டதும், அப்பாவின் மாற்றம் ஏன்?...
அவன் தனக்குள் மாறி மாறிக் கேட்டுக்கொண்டு சீட்டில் கண் மூடியபடி சாய, தைஜூ அவனின் மனதறிந்து அவன் விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடர ஆரம்பித்தாள்…
சதியை அவள் இத்தனை நாள் பார்த்த விதத்திற்கும், இன்று ஜெய்யை அவள் அணுகி நின்ற விதத்திற்கும் இடைப்பட்ட வித்தியாசம் தைஜூவிற்கு பல கேள்விகளை எழுப்பியது…
சதியின் காதல் தைஜூவிற்கு தெரியும்… எனினும், இப்படி சரிபாதியாய் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்ற எண்ணமே அவளுக்கு மயிர்கூச்சத்தினை ஏற்படுத்தியது…
ஜெய்-சதி இருவரின் உரையாடல்கள், அவர்களின் அழகான காதல் அனைத்தும், தைஜூவிற்கு புரியாத புதிராகவே இருந்தது… அதைப் பற்றி தாத்தா பிரம்மரிஷியிடம் கேட்கலாமா?...
தட்சேஷ்வரின் எதிர்ப்பை சரி செய்து, சதியுடன், ஜெய்யை எப்படி சேர்த்து வைக்க?... இஷானிடம் இதைப்பற்றி ஊர் சென்று சேர்ந்ததும் பேசிடுவது தான் சரியான வழியா?...
பலவிதமாக கேள்விகளின் மத்தியில் அகப்பட்டுக்கொண்டவளாய் சென்னை சென்று சேரும் நொடியை எதிர்நோக்கி தைஜூ காத்திருக்க,
தான் கண்ட மகனின் முகம் நினைவுக்கு வந்து வந்து போனது சோமநாதனுக்கு… இத்தனை நாளில் அவனை இதுபோன்றதொரு முகத்தோற்றத்தில் கண்டிராதது அவருக்கு சற்றே யோசனையை அளித்தது…
தட்சேஷ்வரின் நடவடிக்கை அவருக்கு ஜெய்-சதியின் உறவை விவரிக்க, ஜெய்யின் கைகளில் இருந்த தாலி, அவரை சிந்திக்க வைத்தது அதிகமாய்…
தன் மகன் ஜெய்… அவனுக்கு சதியை திருமணம் செய்து வைக்க தனது நண்பனே மறுப்பு தெரிவிப்பது ஏன்?... அந்த தாலி யாருடையது?... அதைப் பார்த்து ஏன் ஈஸ்வர் திணற வேண்டும்?...
தன் எண்ண சிந்தனைகளை தட்டிவிட்டுவிட்டு, மகனையே சுற்றி சுற்றி வந்தது அந்த தகப்பனின் உள்ளம்….
அதே நேரத்தில் ஜெய்யினையே சதியின் உள்ளமும் நாடியது… மிகப்பெரும் தாண்டவத்தைப் பார்த்து, ருத்ரன் என்ற அறைகூவல் தான் சொன்னது எதனால்?... அவரை சாம்பலுடனும் மேலாடை இல்லாமலும் நான் கண்ட காட்சி இன்னமும் என் அடி நெஞ்சை கலங்க வைப்பதின் மர்மம் என்ன?...