அதே நேரம் அத்தை வீட்டிற்க்கு அவள் செல்ல முயலும் போதெல்லாம் அம்மா அவளுக்கு வேறு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டிருக்க அங்கு போகவே இல்லாமல் ஆயிற்று.
அவர்கள் வீட்டின் ஆஃபீஸ் அறை போல பயன்படுத்தப்படும் அந்த சிறிய அறையில் அண்ணனும் , அப்பாவும் பேசிக் கொண்டிருக்கும் குரல் அங்கிருந்து கடந்துச் சென்றவளுக்கு கேட்க, அந்த அறையை ஒட்டி இருக்கும் பகுதியில் நிற்கும் தன் அன்னையின் முகவாட்டம் தடுத்து நிறுத்தியது.
நான் ஒரு பேச்சுக்கு தான் சம்பளம் கொடுக்க வேணான்னு சொன்னேன்டா அவன் என்னன்னா இது தான் சாக்குன்னு இத்தனை மாசமா நம்ம பிள்ளையை ஒத்த ரூவா கூட கொடுக்காம வேலை வாங்கி இருக்கான் பாரேன்…… என அப்பா அண்ணனிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் சட்டென தன் அறை நோக்கி விரைந்தாள்.
தன் முன்னே விரிந்து கிடந்த பாஸ் புக் , ஏடி எம் கார்ட், காலாண்டு பேங்க் ஸ்டேட்மெண்ட்கள் அனைத்தையும் பதிலற்றவராக பார்த்துக் கொண்டிருந்தார் தாமஸ்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்..
ஏன்பா இப்படி எல்லாம் பேசறீங்க, அவங்களும் நம்ம ஃபேமிலிதானே? இப்படி பேசினா அம்மாக்கு கஷ்டமா இருக்காதா? என் கிட்ட விஷயம் கேட்டிருந்தா நான் முன்னயே சொல்லி இருப்பேன். எனக்கு ஃபர்ஸ்ட் மந்த்ல இருந்தே மற்ற எம்ப்ளாயீஸ் மாதிரி அத்தான் சம்பளம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க வேணான்னு சொல்லியும் அவங்க கொடுத்தா தப்பா நினைச்சுக்குவீங்கன்னு உங்க கிட்ட சொல்ல வேணான்னு சொல்லிட்டாங்க. எனக்கு தான் செலவே இல்லையே அதான் நான் இந்த ரூபாய இது வரை யூஸ் செய்யவே இல்லை என்றவளின் கூற்றின் படி அந்த சமீபத்திய ஸ்டேட்மெண்ட். அவளது வங்கிக் கணக்கின் பேலன்ஸாக சில லட்சங்களைக் காட்டிக் கொண்டிருந்தது.
அதுவரை தந்தையிடம் பேசியவள் அன்னையின் அருகில் சென்று கரத்தைப் பிடித்து அவரது தோளில் செல்லமாக சாய்ந்துக் கொண்டு அவரது முகபாவனையை ஆராய்ந்தாள். தன்னுடைய கணவன் அனாவசியமாக பேசிக் கொண்டிருந்த ஒரு விஷயம் இல்லையென்றானதில் சாராவுக்கு ஒரு விதத்தில் தலை நிமிர்வுதான் என்றாலும் இன்னமும் அவர் உள்ளத்தின் கலக்கம் மறையவில்லை. அனிக்காவை பெண் கேட்டு தன் அண்ணனுடைய போன் கால் வந்த நேரம் முதலாக கணவனுடைய நடவடிக்கை அவருக்கு சரியாக தோன்றவில்லை.
ஏதோ தான் பரம்பரை பணக்காரர் போலும் தன் அண்ணன் வீட்டினர் தகுதியற்ற பிரஜைகள் போலும் நடந்துக் கொள்வது அவருக்கு பொறுக்க முடியவில்லை. விருப்பமில்லை என்றுச் சொல்லி ஒரே பேச்சாக இதை முடித்து விட்டிருந்தாலாவது நன்றாக இருக்கும். அதை விட்டு விட்டு கடந்த சில நாட்களாக கிறிஸ்ஸிடம் தன் அண்ணனை அவர் குடும்பத்தைக் குறித்து விவாதிப்பது அவருக்கு மனதிற்கு கொஞ்சமும் உவகை அளிக்கவில்லை.
என்னதான் கிறிஸ் தன்னுடைய தலை மூத்த மகனாக இருந்தாலும், ஒரு தாயாக அவன் அவருக்கு சின்னப் பையன்தானே. மனைவியின் பிறந்த வீட்டினர் என்றும் பாராமல் அவனை வைத்துக் கொண்டு கணவர் விமரிசிப்பது அவருக்கு மனச் சங்கடத்தை ஏற்படுத்தியது . அந்த வகையில் கிறிஸ் தந்தையின் பேச்சை செவி கொடுத்து கேட்டானே தவிர அவரோடு இணைந்து அதற்கேற்ப பேசி பேச்சை வளர்க்கவில்லை. தாயின் மனதை நோகடித்து விடக் கூடாது என்கிற விதத்தில் தன்னுடைய இரண்டு பிள்ளைகளின் அணுகுமுறைகள் குறித்தும் அவருக்கு பெருமிதம் தோன்றிற்று..
தன்னுடைய மகளுக்கான வரன் தன் அண்ணன் மகனென்றால் அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால், மனைவி விருப்பத்தை எப்போதும் அறிந்து நடப்பவர் மகள் திருமண விஷயத்தில் மட்டும் தன்னை ஒதுக்கியே வைத்திருப்பது மனதை கஷ்டப் படுத்தினாலும் கணவருடைய பிடிவாதம் அறிந்தவராக அவராக என்ன முடிவெடுத்தாலும் சரி தான் உயிராக எண்ணும் மகளுக்கு சரியாக தான் அவர் தெரிவு செய்வார் என்று எண்ணிக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்.
தூங்கி விட்ட தன் மகளை தூக்கிப் போக அனிக்கா அறைக்கு வந்த பிரபாவை, அனிக்கா (ஹனி விழித்து விடக் கூடாதென்பதற்காக) தன் வாயில் விரல் வைத்து சமிக்ஜை காட்டியவளாக தன்னுடைய அறையின் டெரஸிற்க்கு கூட்டிச் சென்றாள்.
என்னாச்சு அனி?
உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் அண்ணி?
தன்னை எப்போதும் ஸ்பை ஆக்கும் தன் செல்ல நாத்தனாரின் தலையில் செல்லமாய் முட்டி இப்ப என்ன டவுட்டுங்க மேடம், தினமும் நான் வர்றப்போ அத்தையும் பொண்ணும் வாயில போற கொசு தெரியாம தூங்கிட்டு இருப்பீங்க. இன்னிக்கு நீ கொட்டு கொட்டுன்னு முழிச்சு இருக்கியேன்னு பார்த்தேன் எனச் சிரித்தாள் பிரபா.
வீட்ல ஏதோ படம் ஓடிட்டு இருக்கு ஆனா என்னன்னு தான் எனக்கு புரிய மாட்டேங்குது? என்னை சின்னப் பிள்ள சின்னப் பிள்ளன்னே எல்லாரும் ஒதுக்கி வைக்கிறாங்க அண்ணி….. செல்லமாய் கொஞ்சம் வருத்தமாய் உதட்டை பிதுக்கியவள். எனக்கு இப்போ 23 வயசு ஆகப் போகுது நான் என்னச் சின்னப் பிள்ளையா அண்ணி? அம்மா ஏதோ டென்ஷன்ல இருக்கிறா மாதிரி , அப்பாவும் ஏதோ வித்தியாசமா பேசறாங்க…..உங்களுக்கு ஏதாவது தெரியுமா?