தொடர்கதை - கானல் நீரினால் காய்ந்த நதிகள் - 06 - ரேவதிசிவா
கட்டியவன்
காவலனாய் இல்லாவிடினும்
கயவனாய் மாறலாமா?
கண்முன்னே நடக்கும்
காட்சிகள் யாவும்
கானலாய் மாறாதோ?
இடம்: ஹரியானா
ஹாரக்கின் பதில் தனக்கு சாதகமாகத்தான் முடியுமென்று திடமாய் நம்பினான் அக்கயவன்.பிறன் மனை நோக்கா பண்பு அங்கிருந்த யாரிடமும் இல்லை.
அவர்களின் பார்வையில் பெண்களுக்கான இலக்கணம் என்பது,ஆண்களுக்கு அனைத்து பணிகளை முகம் கோணாமல் செய்வதும், அவர்களின் மகிழ்ச்சிக்காக மட்டுமே பெண்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்பதே!
ஆரம்பித்திலேயே மோசமாய் இருந்தவனின் எண்ணங்கள் நண்பர்களின் துர்போதனையில் குரூரமாய் மாற தொடங்கியது.
வீட்டிற்கு வந்தவுடன் அவளையும் அவள் பிள்ளைகளையும் விற்க முடிவு செய்தான்.
எப்பொழுதும் போல் தன் வேலைகளை முடித்துவிட்டு பிள்ளைகளுடன் வீடு வந்தாள் அவள்.
நாளை வெளியே செல்ல வேண்டும், ஒரு வாரத்திற்கு தேவையானவற்றை எடுத்துக்கொள்! என்று கூறிவிட்டு சென்றான் ஹாரக்.
அவள் மனதில் பழைய நினைவுகள் வலம்வர ஆரம்பித்துவிட்டது. இதுபோல் சொல்லியல்லவா தன்னை ஈன்றோர் விற்றுவிட்டு சென்றனர். மறுபடியும் அதுபோல் நிகழுமா ? என்று அச்சத்தில் அவள் மனம் தவிக்க செய்தது. ஏனெனில், இங்கு அதுபோல பல பெண்களைப் பார்த்துள்ளாள். சிலர் நான்காவது தடவையாகவும் விற்கப்பட்டிருக்கினர்.அவனுக்கு எப்படியோ? ஆனால் இவனை மட்டுமே கணவனாக எண்ணிக்கொண்டு நான் வாழ்கிறேன். என்னால் வேறொருவனை எப்படி ?
கடவுளே! உண்மையில் நீ இருக்கிறாயா? எங்களைப் போன்றோர் படும் அவலங்களைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய்.உனக்கும் இவர்களைப் போல் கல் மனம் என்று தெரிந்தும் உன்னையே பற்றுக்கோலாய் எண்ணிக்கொண்டே வாழ்கிறோம். ஏன்? எங்களுக்கு வாழ்வதற்கு ஆசை என்று நினைத்தாயா? இறப்பைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்கூட எங்களுக்கில்லையே! ஏன் பெண்களைப் படைத்தாய்? வெறும் சதைப் பிண்டங்களாய் பார்ப்பவர் மத்தியில் தோற்றுவித்து, சிறுக சிறுக உடலையும் உள்ளத்தையும் நரக வேதனையில் தவிப்பதற்கு, எங்களை நீ கல்லாகவே படைத்திருக்கலாம்! அப்பொழுதுகூட நீ ஆண்களில் கால்களில் மிதிப்படவே எங்களைத் தோற்றுவிப்பாய்! எத்தனை அத்துமீறல்களைத் தான் தாங்குவது?
உடல்! தீயிட்டு கொளுத்தினால்தான் வெந்து போகுமா? அவர்களின் கரங்கள் வலுக்கட்டாயமாய் எங்களைத் தீண்டும்பொழுது உடலும் மனமும் எரிவதை நீ அறிவாயா? இவனின் எண்ணம் புரிந்துவிட்டது.நீ படைத்த உலகத்தில் தான் எத்தனை பாரப்பட்சம்? எனக்கு நேர்ந்ததை என் பிள்ளைகளுக்கு விட மாட்டேன். கடவுள் வருவார், நிச்சயம் துன்பத்தைத் தீர்ப்பார் என்று கூறுபவர்களுக்குத் தெரியுமா? பத்து பேர் மத்தியில் ஒருத்தியை வதைக்கும் பொழுது காப்பாற்ற வராத கடவுள், பிஞ்சுக் குழந்தைகளை சித்திரவதைக்கும் பொழுது வராத கடவுள், அப்பாவி மக்களை காப்பாற்ற வராத கடவுள் ! என் பிள்ளைகளையா காப்பற்றப் போகிறார்? நான் ஒரு மட்டி? எதற்கு உதவாத ஒன்றை எண்ணிக் கொண்டு கரைகிறேன்! அடங்கி அழுது, பணிந்து போவதால்தானே ஆடுகின்றனர் அக்கிரமக்காரர்கள்? அழிக்கிறேன் உங்களை அழிக்கிறேன் என்று மனத்தில் ஒரு சூளுரையை அவள் எடுத்தாள்.
இன்னும் சிறிது நேரத்தில் அவன் வந்துவிடுவான் என்பதை அறிந்தவள், தன் செயல்களை அவசரக்கதியில் தொடங்கினாள்.
சமையலை முடித்து, ஒரு துணிமூட்டையில் பிள்ளைகளுக்கு நைந்ததில் நல்ல துணிகளை வைத்து ஒரு சிறு மூட்டையாகக் கட்டி,கைகளில் தன்னிடமிருந்த சொற்பத் தொகையை அதனுள் வைத்து முடிச்சிட்டாள். அவனின் வருகையின் பொழுது இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.
உணவின் பொழுது அவளுக்கு பல வசவுகளைத் தந்தவன்,குடிபோதையில் தான் செய்துள்ள ஏற்பாட்டையும் வெளியிட்டான். அவள் அறிந்ததுதான் என்றாலும் அந்நொடியின் வலியை எந்த வரிகளாலும் பிரதிபலிக்க முடியாது!
அவனை இப்பொழுது கொல்ல அவளால் முடியும் என்றாலும், தனக்கு எது நேர்ந்தாலும் தன் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பதை உணர்ந்தவள் , வேகமாக சென்று தன் பெண்ணை எழுப்பி, தன் குழந்தையை தோளில் சாய்த்து கொண்டு அந்நரகத்தை விட்டு வெளியேறினாள்.
வெளியில் இருக்கும் விகாரமான நரகத்தின் கைகளில் இவள் சிக்கினால்?
பெரியவர்கள் சொன்னார்கள்!
வாணலில் தம்பித்தவன்
அடுப்பில் விழுந்தானாம்!
இவளின் நிலையும் அதுபோல் ஆகுமோ?
விடை தேடும் பல கேள்விகள் தொடரும்...
{kunena_discuss:1124}