எத்தனையோ பேர் முட்டி மோதி வராம தவிக்கிற படிப்பு எனக்கு மிக சாதாரணமாவே வந்துச்சு. ஆனா, எனக்குத்தான் எதிலயும் நாட்டமில்ல, அன்பில்லாத ஒரு இயந்திர தனமான வாழ்க்கையை நான் பல வருஷமா அதுவும் சின்ன வயசிலயே வாழ்ந்திட்டேன். அதனால வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்லாம இருந்துச்சு……..என்னோட மார்க்ஸ் பார்த்து டாக்டர், எஞ்சினியர்னு பற்பல கற்பனை அம்மா அப்பாக்கு, அடிக்கடி கேட்பாங்க நீ இதை படிக்கிறியா? அதை படிக்கிறியான்னு, ஆனா அவங்க சொன்னதுக்காகவே நான் அதெல்லாம் படிக்க கூடாதுங்கிற வறட்டு பிடிவாதத்தில இருந்தேன்.
நம்மளை பிடிக்காம தானே இவ்வளவு தூரம் அவங்களை விட்டு பிரிச்சு வச்சிருக்காங்கன்னு எனக்குள்ளே ஆத்திரம், அதை வெளிக்காட்ட இப்படி அவங்க சொல்லுற எதையுமே செய்யாம இருக்கிறது தான் வழின்னு தோணுச்சு.
ம்ம்…
அப்புறமா நீ என் வாழ்க்கைல வந்த, நீ அன்னிக்கு அண்ணன் மேரேஜ் அன்னிக்கு நானும் ஜீவாவும் பேசிட்டு இருந்ததை கேட்டேன்னு சொன்னில்ல……
ம்ம்…..
அப்ப அவன் என் கிட்ட “அனி உனக்கு கிடைக்காட்டா என்ன செய்வன்னு கேட்டான்” அதுவரைக்கும் கூட நான் ஒரு குருட்டு நம்பிக்கைல தான் இருந்தேன். அவன் வார்த்தை என்னை ரொம்ப சுட்டுப் பொசுக்கிட்டு, வாழ்க்கையே ஒன்னும் இல்லதது போல வெறுமையா தோணுச்சி, அன்னிக்கு மனசில பதிச்சிக் கிட்டேன். எப்படியாவது மாமா மதிக்கிற அளவு உயர்ந்து காட்டணும்னு. நிறைய நாள் ஒழுங்கா தூங்கினது இல்ல…வெறிப்பிடிச்ச மாதிரி உழைச்சிருக்கேன்……வீட்டுல எல்லோர் சப்போர்ட் கிடைச்சது பைத்தியக்காரன் மாதிரி உழைச்சதுக்கெல்லாம் மொத்தமா பலன் கிடைச்சது,
………
நான் இந்த பணம், பொருள் இதெல்லாம் என்னதான் சாதிச்சாலும் அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமே இல்ல அனி, ஆனா நீ என்னை காதலிச்ச பாரு, அதுதான் எனக்கு ரொம்ப பெரிய விஷயம்.
அவள் நாடியில் பெருவிரல் கொடுத்து நிமிர்த்தியவன் மென்மையாய் உதட்டில் முத்தமிட்டு தொடர்ந்தான்.
நீ ஒருவேளை எனக்கில்லைன்னு ஆயிருந்தா நான் ஒருவேளை இருந்திருப்பனோ, மாட்டேனோ….
……ஸ்ஸ் ஷீ… இதென்ன நீ….. கண்ணில் நீரோடு பார்த்திருந்தவளை அதட்டினான்.
அதான் நீ இப்ப கிடைச்சிட்டியே, சும்மாதான பழைய கதை பேசறேன் அதை அழாம கேட்க மாட்டியா? அவள் முயன்றும் அந்த கண்ணீர் துளி நில்லாமல் அவள் கன்னம் வழிந்து ஓடியது.
அனி…….ப்ளீஸ்மா அவர்களுக்குள்ளே காதல் உருகி கரைந்தது.
தொடர்ந்து அவனுக்கு ஒன்றும் பேச தோன்றவில்லை, அவளுக்கும் கேட்க தேவையில்லை என்றாயிற்று.
தூக்கம் கலைந்து மனைவி தந்த டீயை சுவைத்துக் கொண்டிருந்தவர் கண்களில் மகளும் , மருமகளும் வந்தது தெரிந்தது. தன் கண்ணே பட்டுவிடுமோவென அவர்களை பார்ப்பதை தவிர்த்தார்.
மறுவீட்டிற்க்கு வந்து திரும்பும் போது பெண் வீட்டில் புது உடை எடுத்துக் கொடுக்க அதை அணிந்தே வீடு திரும்ப வேண்டுமென்பதால் இருவரும் புது உடைகளில் இன்னும் அதிகமாய் கண்களை கவர்ந்தனர்.
ரூபனுக்கு பிரபல பிராண்ட் ஷர்ட், பேண்ட் மிக பொருத்தமாய் இருக்க, அனிக்காவிற்க்கு அந்த ஆரஞ்சு நிற பட்டுப் புடவையும் அழகாய் பொருந்திப் போனது. தன்னருகே மரியாதையாய் அமர்ந்த ரூபனிடம் தாமஸ் புன்னகை புரிந்தார் , ஒரு சில அளவளாவல்கள் தொடர்ந்து இருவரும் விடைப் பெற்றனர்.
மகளின் முகப் பொலிவு, கணவனோடான இழைவு, சட்டு சட்டென்று பூக்கும் வெட்கமும், சிரிப்பும் அவர் கண்களில் பட தவறவில்லை. ஜோடிக் கிளிகள் என்று சொல்லும் வார்த்தையை கண்கூடாக இன்றுதான் அவர் தன் மகள் மருமகனில் கண்டிருந்தார்.
உள்ளத்தில் யாருக்கும் சொல்லவியலாத ரகசிய அறையொன்று திறக்க, தான் எவ்வளவு பெரிய தவறு செய்யவிருந்தோம் என எண்ணி மனம் நடுங்கிற்று. எண்ணங்கள் சுழன்றன.
அனிக்கா ரூபனிடம் அறை வாங்கி மயங்கி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருந்த நேரம் அது, ரூபன் பிடிவாதமாக அவள் சுய உணர்வு இல்லாத நிலையில் தாலியை அணிவித்து விட்டு, அவளை தன்னோடு அழைத்துச் செல்லப் போவதாக ஒரு புறம் மிரட்டல் விடுக்க, மகள் தன் சார்பாக பேசுவாள் எனப் பார்த்தால் அவளோ ரூபனை காப்பாற்ற பொய் சொன்னதும், வீட்டிற்க்கு வந்துப் பார்த்தால் மகளின் தற்கொலை கடிதமும், தூக்க மாத்திரை பாட்டிலும் கிடைக்க அந்த நேரம் தன் வாழ்விலேயே அடுக்கடுக்காக பல அதிர்ச்சிகளை சந்தித்து வெகுவாக அதிர்ந்து போயிருந்தார்.
தீபனிடம் நான் என் மகளுக்காக பார்த்திருக்கும் இடம் மல்டி மில்லியனர் ஃபேமிலி, அதை விட அவர்கள் அவருக்கு சொந்தமும் கூட எனச் சொல்லி ரூபனுக்கு பதில் சொல்ல ஒரு வார அவகாசம் கேட்டிருந்தார்.