தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 15 - தேவி
முதலில் ஸ்டாப் ரூமில் இருந்து பேசிக் கொண்டு இருந்தவர்கள், தங்களை பற்றி பேச ஆரம்பிக்கவும், நடந்து கொண்டே காலேஜ் கிரௌண்ட் வந்து இருந்தார்கள்.
அங்கே எதிர் எதிராக இருந்த இரண்டு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவர்கள், ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் நோக்கினர்.
மலர் செழியனிடம் நன்றாக பேசிக் கொண்டு இருந்தாலும் அவள் மனம் ஏனோ சொல்ல தெரியாத உணர்வில் இருந்தது. செழியனுக்கும் அவளிடம் உள்ள தடுமாற்றம் புரிந்தது.
அவளை சமன்படுத்தும் விதமாக பேச்சை மாற்றினான் செழியன்.
“மலர்.. உன்னை பற்றி சொல்லு..”
“என்னை பற்றி தான் உங்களுக்கு தெரியமே.. “
“இல்லைமா.. உன்னை பற்றி என்றால் உன் படிப்பு, குடும்பம் இது எல்லா இல்லை.. உன் எண்ணங்கள், ஆசைகள் இதை பற்றி எல்லாம் சொல்லு..”
“இன்று வரை வீட்டில் கேட்டது எல்லாம் கிடைக்கும்... இன்னும் சொல்ல போனால் நான் கேட்கும் அளவு வைக்கவும் மாட்டார்கள் .. அதனால் அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசமான எண்ணங்கள் எல்லாம் எனக்கு இல்லை.. ஆனால் சின்ன சின்ன ஆசை பாட்டில் வருகிற மாதிரி மழையில் நனைவது பிடிக்கும். பனி படர்ந்த மலைகள் பார்க்க பிடிக்கும்.. அந்த பனிக்கட்டியில் சறுக்கி விளையாட பிடிக்கும்.. சரித்திரங்களில் வரும் இடங்கள் எல்லாம் பார்க்க ஆசை..”
“நீ சிம்லா, டார்ஜிலிங் எல்லாம் சென்றது இல்லையா.. ? உன் அப்பாவிற்கு டூர் படி எல்லாம் இருக்குமே.. “
“ஹ்ம்ம்.. இல்லை.. எங்க ஆச்சிக்கு பனி அவ்ளோ ஒத்துக்காது.. நாங்க அவங்கள விட்டுட்டு எங்கியும் போக மாட்டோம்.. அதனாலே வட இந்தியா பக்கம் போனது இல்லை. எனக்கு ஜெய்பூர் அரண்மனை எல்லாம் பார்க்கனும்னு ரொம்ப ஆசை.. “
“நீ படிக்கும் போது டூர் போக வில்லையா?”
“ம்.ச்ச்.. முதல் ரெண்டு வருஷம் ஆச்சி அனுப்ப மாட்டேன்னு சொல்லிடாங்க.. அப்புறம் வந்த வருஷத்துலே எல்லாம் ஒரு தடவை எனக்கு டைபாய்ட் .. அப்புறம் ஆச்சிக்கு பிரஷர் வந்து அட்மிட் ஆகர மாதிரி ஆயிடுச்சு.. அதுனாலே போக முடியல. நீங்க டூர் எல்லாம் போயிருக்கீங்களா?”
“எங்க அப்பா பத்தி தெரியும்தானே.. சொந்த பிசினஸ் என்பதால் அவ்ளோ சீக்கிரம் எங்கியும் கிளம்ப மாட்டங்க.. ஊர்லே நடக்கிற திருவிழாக்கு மட்டும் தான் வருஷ வருஷம் பிரேக் எடுத்து போயிட்டு வருவோம்.. ஸ்கூல் படிக்கும் போது டூர் எல்லாம் அனுப்ப மாட்டங்க.. காலேஜ் வந்ததுக்கு அப்புறம் என்னை அவராலே கண்ட்ரோல் பண்ண முடியல.. அப்போ நீ சொன்ன இடங்கள் எல்லாம் போயிட்டு வந்து இருக்கேன்.. முக்கியமா ராஜஸ்தான் பக்கம் போயிட்டு வந்தது அந்த ஜெய்பூர் அரண்மனை எல்லாம் பார்க்க போகணும்னே பிளான் பண்ணினது. “
“ஹ்ம்ம். நல்ல என்ஜாய் பன்னிருக்கீங்க போலே”
“கவலைபடாத செல்லம்மா.. நம்ம கல்யாணம் முடிந்த பிறகு நீயும் நானும் எல்லா இடங்களும் போயிட்டு வரலாம்..” என்று சொல்லியபடி கண்ணடித்தான்.
அத்தனை நேரம் சகஜமாக பேசிக் கொண்டு இருந்த மலர், இப்போது உதட்டை கடித்து மௌனமானாள்.
“ஹேய்.. என்ன சத்தமே காணோம்.. “
அவனின் கண்களை சந்திக்க முடியாமல் தலை தாழ்த்தியவள் , மீண்டும் நிமிர்ந்து செல்ல சிணுங்கலாக பார்த்தாள்... அந்த பார்வையில் அவன் தானாக விசில் அடிக்க ஆரம்பித்தான்.
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஒரு ஞாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதலி செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே
அவனின் விசில் கேட்டு இன்னும் வெட்கம் அதிகம் ஆகியது.
செழியனும் மலரும் பேசிக் கொண்டு இருக்கும் போது செழியனுக்கு போன் வர, பேசிவிட்டு வந்தவன்,
“மலர் , வளர்மதி மேடம் இன்னும் பத்து நிமிஷத்திலே வந்துடறேன்னு சொல்றாங்க..”
“அவங்களையும் வர சொல்லிருக்கீங்களா?”
“ஆம்மாம்மா.. நான்தான் வேலை இருக்குன்னு சொன்னேன் இல்லியா?”
“ஒஹ்.. அது எனக்காக சொன்னதுன்னு நினைச்சேன்..”