‘நான் இல்லைன்னு சொல்லிடுங்க..’ ஒன்றும் புரியாமல் கொஞ்சம் திகைத்து மீண்டவன் சமாளித்துக்கொண்டு ஹரிணியிடம் சொன்னான்.
‘சாரி ஹரிணி அவளுக்கு கொஞ்சம் உடம்பு முடியலை. தூங்கறா. நான் அப்புறம் பேச சொல்றேன்..’ சொல்லிவிட்டு துண்டித்திருந்தான் அழைப்பை.
ஹரிணியின் தலை முழுவதும் குழப்ப மேகங்கள். ‘சற்று முன் அவளிடம் கொடுக்கிறேன் என்றுதானே சொன்னான் ஷிவா. திடீரென என்னவாயிற்று??? அங்கே கேட்டது விவேக்கின் குரல்தானே??? அப்படி என்றால் அப்பா அங்கேதான் இருக்கிறாரா??? விவேக்தான் அவளை என்னிடம் பேச விடாமல் தடுக்கிறானா???
அடுத்த நொடி அவள் கைப்பேசியிலிருந்து அழைப்பு பறந்தது ஹாசினிக்கு.
‘அப்பா விவேக்கிட்டேதானே இருக்கார். எனக்கு மெஸ்சேஜ் வந்திருக்கு அவன் தம்பி பொண்டாட்டிகிட்டேர்ந்து. உண்மையை சொல்லு ஹாசினி.’ மிரட்டலாகவே வந்தது ஹரிணியின் கேள்வி. அவளது தொனி ஹாசினியை குலுக்கியது நிஜம்.
‘தெரிந்துக்கொண்டு விட்டாளே இவள். இப்போது இங்கு வந்து என்னென்ன செய்வாளோ???’ மனம் கொஞ்சம் கலங்கினாலும் எதையும் வெளிக்காட்டிகொள்ளாமல் சொன்னாள் ஹாசினி.
‘ஹரிணி எனக்கு நிறைய வேலை இருக்கு. நீ செஞ்சுக்கற கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கிட்டு உன்னோட வம்பு வளர்க்க முடியாது. தயவுசெய்து போனை வெக்கறியா???’
பற்றிக்கொண்டு வந்தது ஹரிணிக்கு.
‘வரேன். இன்னும் ரெண்டு நாளிலே நானே சென்னை வரேன். அப்புறம் கவனிச்சுக்கறேன் உங்களை எல்லாம்’ சொல்லிவிட்டு துண்டித்தாள் அழைப்பை.
‘இன்னும் இரண்டு நாட்கள் இருக்கிறதா??? அதற்குள் ஏதேனும் செய்துவிடுவோம்’ இங்கே கணக்குப்போட்டுக்கொண்டாள் ஹாசினி.
அதே நேரத்தில் அங்கே மும்பையிலிருந்து சென்னை வரும் விமானத்தில் இருந்தான் சுதர்ஷன். அவன் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் அந்த பெண். அவனது மனைவி!!! அவளது கையில் அவர்களது ஒன்றரை வயது மகன்.
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தான் அவன். அவர்களோடு அவனது மனைவியின் உறவினர்கள் சிலரும் இருந்தனர். அவர்கள் எங்கே சென்றுக்கொண்டிருக்கிறார்கள், எங்கிருந்து வருகிறார்கள் என கேட்டால் கண்டிப்பாக தெரியாது இவனுக்கு.
நீண்ட நாட்களுக்கு பிறகு மகனை பார்க்கிறான். வளர்ந்திருக்கிறான் மகன். பேரழகாய் இருக்கிறான். அள்ளிக்கொள்ள துடிக்கிறது மனம். ஆனால் இயலாது இவனால்.
விவாகரத்து!!!
இவர்களுக்கு திருமணம் நடந்து மூன்று ஆண்டுகளுக்குள், எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. கடைசிவரை இது வேண்டாமென போராடித்தான் பார்த்தான் சுதர்ஷன். ஆனால் எதுவும் சரி வரவில்லை.
இருவருக்கும் இடையில் வழக்கமான சண்டைகள் பூதாகார ரூபமேடுக்க எல்லாம் எப்படி எப்படியோ திரும்பி......
அவன் மீது பாசத்தை பொழிந்த ஒரு உயிரின் இழப்போடு ஆரம்பித்த வாழ்க்கை!!! இப்படிதான் முடிந்து போகுமோ???
இதோ கண் முன்னே அவன் மகன். அவன் சிரிப்பது கேட்கிறது. குதித்து விளையாடுவது புரிகிறது. ஆனால் சுதர்ஷனால் அவனை நெருங்கக்கூட முடியாது. கோர்ட்டின் உத்தரவு அப்படி!!! இப்போது அவர்கள் முன்னால் இவன் சென்று நின்றால் கூட விமானம் என்றும் பாராமல் இவனது மரியாதை பறிபோகும்.
ஒரு மகனிடமிருந்து ஒரு தந்தையை பிரித்த பாவம். இதோ என் மகன் எனக்கு இருந்தும் இல்லாமல்.... அவனுடைய அன்பை, பாசத்தை ஸ்பரிசத்தை எதையும் நான் உணர முடியாமல்.... சரியாக சொல்ல வேண்டுமென்றால் என் மகனை தந்தை என்ற முறையில் நான் தூக்கிக்கொண்டதே இல்லையே!!! அவன் வயிற்றில் இருக்கும் போதே அவள் என்னை விட்டு பிரிந்து விட்டாளே!!!
கலியுகத்தில் கணக்குகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு தண்டனைகள் உடனுக்குடன் கிடைக்கின்றனவோ!!!
கண்களை கண்ணீர் மறைத்துக்கொள்ள, மகனின் குரல் செவிகளை வருடிக்கொண்டிருக்க கண்களை மூடிக்கொண்டு சாய்ந்துக்கொண்டான் சுதர்ஷன். வயது முதிர்ந்த பிறகுதான், ரத்தம் சுண்டிய பிறகுதான் குற்ற உணர்ச்சிகள் விழித்துக்கொள்ளும் என யார் சொன்னார்கள்??? இதோ தினமும் வாட்டுகிறதே அது என்னை!!!
‘என்னை ஒரு முறை மன்னிப்பாயா விவேக்??? நான் இப்படி கேட்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா???
மறுநாள் காலை பத்து மணி.
விவேக்கின் வீட்டுக்கு சென்று விசாரித்துக்கொண்டு அவன் மருத்துவமனையில் இருக்கிறான் என தெரிந்துக்கொண்டு அங்கே வந்து சேர்ந்திருந்தான் சுதர்ஷன் .விவேக்கை பற்றி விசாரித்துக்கொண்டு அவனும் தாமோதரனும் இருக்கும் அறையை நெருங்கினான் சுதர்ஷன்.
சற்றே ஒருக்களித்து மூடப்பட்டிருந்த அறைக்கதவின் வழி கலகலவென விவேக்கின் சிரிப்பு சத்தம் அவன் காதுகளை தொட்டன.