ஜெமினி கணேசனும், அவரின் அம்மா அப்பாவும்! - நந்தினி
பொதுவாக நான் தேர்ந்தெடுத்து திரைப்படங்கள் பார்ப்பது தான் வழக்கம். சமீபத்தில் ஒரு தோழிக்காக திரை அரங்கம் சென்று ஒரு படம் பார்க்க நேர்ந்தது.
திரைப்படத்தின் பெயர் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.
சிரிப்பு படம் என்று சொல்லி அழைத்து சென்றார் தோழி. படத்தின் போது அவர் முகத்தில் புன்னகை இருந்துக் கொண்டே தான் இருந்தது.
எனக்கு தான் தலையை வலித்தது!
காமெடி படம், கூடவே ப்ளேபாய் கதாநாயகன் எனும் போது படத்தில் வரும் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்காமலே ஊகித்து விடலாம்.
ஆனால் படத்தில் கதாநாயகனின் அம்மா, அப்பா கதாபாத்திரங்களை பற்றி தான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை!
ஜெமினி கணேசன் பற்றி சொல்லி மகனை ப்ளேபாயாக வளர்த்தது தவறு என்பதை புரிந்துக் கொண்ட உடன் அந்த அப்பா என்ன செய்திருக்க வேண்டும்?
அன்பாக எடுத்து சொல்லி இருக்க வேண்டும், கண்டிப்பாக சொல்லி இருக்க வேண்டும்! அல்லது ஏதேனும் முயற்சியேனும் செய்திருக்க வேண்டும்!
சரி அப்படி ஏதேனும் செய்து மகன் திருந்தா விட்டாலும் கூட வேறு வழிகளில் அவரை திருத்த முயற்சித்திருந்திருக்க வேண்டும்!
ஆனால் இவர் சும்மாவே இருந்து ஃபீல் செய்துக் கொண்டே இருக்கிறார்!
கதாநாயகனின் அம்மாவிற்கு முக்கால் வாசி படம் முடியும் வரை மகனை பற்றி தெரியவே தெரியாதாம்! இத்தனைக்கும் மகன் மாடி வீட்டு பெண்ணை காதலிக்கிறார், கீழ் வீட்டு பெண்ணையும் காதலிக்கிறார்!
இப்படியும் கூட அம்மா – அப்பா இருக்கிறார்களா??? தெரியவில்லை!
அம்மா அப்பா குழந்தைகளிடம் அன்பாக இருக்க வேண்டும் நட்புடன் பழக வேண்டும் என்பது சரி, அது ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்! ஆனால் அதற்காக பொறுப்பற்றவர்களாக இருக்க வேண்டுமா??
அட்லீஸ்ட் அப்பா கதாபாத்திரம் சீரியஸாக மகனை திருத்த முயற்சிப்பதாக ஒரே ஒரு காட்சியாவது சேர்த்திருக்கலாம்.
ஊட்டியில் வரும் கதாநாயிகியின் அப்பா, ரிஜிஸ்டர் ஆபிஸில் `சசிக்குமார்னு சொல்லும்போதே நினைச்சேன்' என சொல்லும் பன்ச் போல ஏதாவது ஒரு வசனமாவது பேசி இருந்திருக்கலாம்!
படம் முடித்து வீடு திரும்பும் போது, என் முகத்தை பார்த்தே மனதை புரிந்துக் கொண்ட தோழி,
“கமான் யா, லைஃபை ஜாலியா எடுத்துக்கோ படம் எல்லாம் ஒரு என்டர்டெயின்மென்ட், ரொம்ப யோசிக்காதே “ என்றார்.
உண்மையில் நான் அதிகமாக யோசிக்காததால் தான் படத்தில் வரும் அம்மா- அப்பாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் இல்லையென்றால் படத்தில் அணிவகுப்பாக வரும் கதாநாயகிகளை பற்றி சொல்லி இருப்பேன்!
பல கோடி ரூபாய் போட்டு எடுக்கும் படத்தை பற்றி குறைகளை சொன்னால் பல்லாயிரம் மக்கள் பயன் பெரும் தொழிலின் வசூலை பாதிக்கிறது என்கிறார்கள்! அதிலும் நியாயம் இருக்கிறதாக தான் தோன்றுகிறது!
ஆனால் இது போன்ற படங்களை பார்த்தால், சும்மாவா விமர்சனம் செய்கிறார்கள் என்றும் தோன்றுகிறது!
நீங்கள் மட்டும் படங்களில் இப்படி ஏதேதோ காட்டுவீர்கள், சொல்வீர்கள் கேட்டால் ஜனரஞ்சகம் என்பீர்கள்! ஆனால் நாங்கள் மட்டும் அதை எல்லாம் பார்த்து விட்டு வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டுமா???
ஒரு படம் பார்த்து வெறுத்து போய் எந்த அளவிற்கு யோசிக்க வேண்டி இருக்கிறது!
{kunena_discuss:943}