எழுத்தாளர்களும், அவர்களின் அறிமுகமும் – லக்ஷ்மி
பிரபலமான தமிழ் எழுத்தாளர்கள் அறிமுகமான நாவல் பற்றிய தகவல்களை பகிரும் பகுதி இது.
லக்ஷ்மி என்ற புனைப்பெயரில் பலக் கதைகள் எழுதி நம் மனம் கவர்ந்த எழுத்தாளரின் நிஜப் பெயர் திரிபுரசுந்தரி.
திரிபுரசுந்தரி பதினான்கு வயதில் இருந்தே எழுத தொடங்கினார்.
அவருடைய பெரும்பாலான கதைகள் – சிறுகதைகள், தொடர்கதைகள் அனைத்தும் புகழ் பெற்ற தமிழ் பத்திரிக்கை ஆனந்த விகடனில் வெளி வந்தவை.
சென்னை ஸ்டான்லி கல்லூரியில் திரிபுரசுந்தரி மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார். அப்போது ஆனந்த விகடனின் ஆபிஸ் ஸ்டான்லி பக்கத்தில் ப்ராட்வேயில் இருந்தது.
ஆனந்த விகடனின் ஆசிரியாராக இருந்த வாசனை சந்தித்து, தான் டாக்டருக்குப் படிப்பதாகவும், தற்போது நிதி வசதி சரியில்லை என்ற உண்மையை சொல்லி, தன் கதைகளை பத்திரிக்கையில் பிரசுரித்துப் பண உதவி செய்தால் உதவியாக இருக்கும் என்று கேட்டிருக்கிறார் திரிபுரசுந்தரி.
நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் திரிபுரசுந்தரி கொடுத்த கதைகள் தரமாக இருக்கவே அவற்றை பத்திரிக்கையில் பிரசுரம் செய்து உதவினார்.
லக்ஷ்மி என்ற புனைப்பெயரில் திரிபுரசுந்தரி எழுதிய முதல் தொடர்கதை பவானி. இது ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது.
அதன் பின் லக்ஷ்மி எழுதிய பிற பிரபல நாவல்களான - மிதிலா விலாஸ், பெண் மனம், நாயக்கர் மக்கள், சூர்யகாந்தம், லட்சியவாதி, பண்ணையார் மகள், அடுத்த வீடு, காஞ்சனையின் கனவு, ஸ்ரீமதி மைதிலி, அரக்கு மாளிகை என அனைத்துமே ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளி வந்த கதைகள் தான்.
திருமணத்திற்கு பின் தென்னாப்பிரிக்கா குடிப்பெயர்ந்த லக்ஷ்மி, இருபத்தி இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தியா திரும்பினார். அதன் பிறகு அவர் எழுதிய பெரும்பாலான கதைகளும் ஆனந்த விகடனில் வெளிவந்தது என்பது குறிப்பிடத் தக்கது.