படித்ததில் பிடித்தது - வெற்றியை அனுபவிக்க...!! - வசுமதி
வாழ்வின் ஒவ்வொரு செயலின் பின்னும் அர்த்தம் உள்ளது. இன்பம் உள்ளது. ‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்’ என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை மூலம் விளக்குகிறார்.
“நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்ல செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை அழைத்து, "எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள் எதிர்பார்த்தேன் ஆனால் கிடைக்கவில்லை, இனி நானே ஊர் ஊராகச் சென்று ஆனந்தத்தைத் தேடப்போகிறேன்" என்று கூறிவிட்டு, தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
ஒவ்வொரு ஊராகச் சென்று, எதிரே வரும் மக்கள் அனைவரிடத்திலும் ஐயா ஆனந்தம் எங்கே கிடைக்கும்? ஆனந்தம் இந்த ஊரில் கிடைக்குமா? என்று கேட்டான்.
"நாங்களும் அதைத்தான் தேடுகின்றோம். உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்.", "உங்களைப் போல நாங்களும் ஊர் ஊராகத் தேடுகின்றோம் , கிடைத்தால் சொல்லி அனுப்புங்கள்" என்று வெவ்வேறு விதமாக ஒரே பதில் தான் கிடைத்ததே தவிர ஆனந்தம் கிடைக்கவில்லை.
சோர்ந்து போன அந்தப் பணக்காரன் ஒரு கட்டதில் உயிரை மாய்த்து விடலாம் என்னும் அளவிற்கு வந்துவிட்டான்.
அப்போது ஒரு மரத்தடியில் சாது ஒருவர் அமர்ந்திருந்தார். இவர் நாம் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிப்பார் என்னும் நம்பிக்கையில் அவரை நெருங்கினான்.
சாதுவின் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்தது. கையிலிருந்த வைர மூட்டை நிரம்பிய ஒரு பையை அவர் காலடியில் வைத்து, "ஐயா ஊர் ஊராக நான் சுற்றி வருகிறேன் ஆனால் எனக்கு ஆனந்தம் மட்டும் கிடைக்கவில்லை" என்றான்.
சாது அவனைப் பார்த்து, "உண்மையாகச் சொல்கின்றாயா? இதுவரை உனக்கு ஆனந்தம் கிடைத்ததே இல்லையா?".
அதற்கு அவன் சோகமாக"ஆமாம் சுவாமி உண்மையாகக் கிடைக்கவில்லை", நிஜமாகத்தான் சொல்கின்றாயா ஒரு முறையும் நீ ஆனந்தத்தை அனுபவிக்கவில்லையா? என்று பலமுறைக் கேட்ட பின்பு அவனுக்கு கோவம் வந்துவிட்டது, எத்தனைத் தடவை கேட்டாலும் இல்லை.. இல்லை தான் என்றான்.
அவன் பேசி முடிக்கும் முன்பு சாது, வைரங்கள் நிறைந்த அந்தப் பையை தூக்கிக் கொண்டு ஓடினான்.
"ஐயோ என் வைரம்.. என் வைரம்.. யாராவது பிடியுங்கள்.. காப்பாற்றுங்கள்!" என்று அந்தச் சாதுவை துரத்திக்கொண்டே சென்றான்.
"கொள்ளைக் கொள்ளை! நீயும் ஒரு மனிதனா? நீயும் ஒரு சாதுவா என்று புலம்பிக்கொண்டே துரத்தினான்.
சாதுவிற்கு அந்தக் கிராமத்திலுள்ள அனைத்துச் சந்து பொந்துகளும் அத்துப்பட்டி. அதனால் வேகமாக ஓடிச்சென்றான். கிராமமக்களும் தனவானின் கதறலைக் கேட்டு சாதுவைத் துரத்தினர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் முடியாமல் ஓய்ந்து போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து விட்டனர்.
பின் அவர்களிடம் சற்றும் எதிர்பாராத விதமாக, சாது அந்த வைர மூட்டையுடன் வந்து அமர்ந்தான்.
தனவான் பையை எடுத்துக்கொண்டு நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, வானை நோக்கி கையை உயர்த்தி, "நன்றி இறைவா ! நன்றி" என்று ஆனந்தமாகக் கூறினான். அந்த இன்பத்தில் அருகில் இருக்கும் சாதுவையும் மறந்துவிட்டான்.
சாது கேட்டார், உனக்குச் சிறிதளவாவது ஆனந்தம் கிடைத்ததா? என்று..
சிறிதளவா? இதுபோன்ற ஆனந்தத்தை நான் அனுபவித்தே இல்லை.. இதுவே முதல் முறை என்றான்.
சாது விளக்கினார் : ‘ஆனந்தத்திற்கு முன்பு துக்கப்பட வேண்டியது அவசியம். அடைவதற்கு முன் இழக்க வேண்டியது அவசியம். முக்திக்கு முன் பந்தத்தின் அனுபவம் தேவை. ஞானத்திற்கு முன் அஞ்ஞானம் இருக்க வேண்டியது அவசியம்.’ என்றார்..”
வெற்றியை அனுபவிக்கத் தோல்வியை ருசிக்க வேண்டியது அவசியம்.
தான் படித்ததைப் பகிர்ந்துக் கொண்டவர் வசுமதி
{kunena_discuss:1107}