பக்தி கதை - கணநாயகா, விநாயகா!
கணநாயகா என்பது பிள்ளையாரின் மற்றொரு பெயர். ஆணவத்தால் அறிவிழந்த கணாவை தோற்கடித்ததால் வந்த காரணப் பெயர் இந்த கணநாயகா.
ஒரு ஊரில் அபிஜீத், குணவதி என்ற ராஜா ராணி இருந்தார்கள்.
அவர்களுக்கு ஒரு அழகிய மகன் பிறந்தான். அவனுக்கு கணா என்று பெயர் சூட்டினார்கள்.
கணா பராக்கிரமசாலியாகவும், சிவனின் மீது அதிக பக்தி கொண்டவனாகவும் இருந்தான்.
அவனின் பக்தியில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், கணாவிற்கு பல வரங்களை அளித்தார்.
இந்த வரங்கள் கணாவிற்கு தலைகனத்தை கொடுத்தது!
ஒரு நாள் கணா கபிலர் எனும் துறவியின் ஆசிரமத்திற்கு சென்றிருந்தான். அங்கே கபிலர் சிந்தாமணி எனும் அரிய மாணிக்க கல்லை வைத்திருப்பதைக் கண்டான். இந்த சிந்தாமணி கேட்பதை எல்லாம் கொடுக்கும் வல்லமை வாய்ந்தது!
சிந்தாமணியின் மீது ஆசைக் கொண்ட கணா அதை தன்னிடம் தருமாறு கபிலரைக் கேட்டான். ஆனால் கபிலர் அதை கொடுக்க மறுக்கவே, ஆத்திரத்துடன் அந்த மாணிக்க கல்லை கபிலரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டான்.
விநாயகரின் பக்தரான கபிலர், வருத்தத்துடன் விநாயகரிடம் முறையிட்டார்.
கபிலரின் மன வருத்தத்தை உணர்ந்த விநாயகர், கணாவின் தலையை அவர் கொய்வதாக அவனுக்கு கனவு வர செய்து அவனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதனாலும் மனம் திருந்தாத கணா கபிலரைக் கொல்ல அவரின் ஆசிரமம் நோக்கி தன் படையுடன் செல்ல முடிவு செய்தான்.
மகனின் தவறை எடுத்து சொல்லி மாணிக்க கல்லை திருப்பிக் கொடுத்து விட கணாவின் தந்தை அவனிடம் மன்றாடினார். ஆனாலும் அவரின் பேச்சை கேட்க மறுத்து படையுடன் கபிலரின் ஆசிரமத்தை நோக்கி சென்றான் கணா.
அங்கே விநாயகர் தன் படையுடன் அவனுக்காக காத்திருந்தார்.
விநாயகருக்கும் கணாவிற்கும் இடையே நடந்த போரில் கணாவை கொன்று விநாயகர் வெற்றிபெற்றார்.
அவனிடம் இருந்து சிந்தாமணியை எடுத்து கபிலரிடம் கொடுத்தார்.
ஆனால் அதை ஏற்காமல், சின்னச் சிறிய கல் என்றாலும் அதனாலேயே இத்தனை பெரிய போர் மூண்டது! செல்வமே பல பிரச்சனைகளின் காரணம் என்று சொல்லி அதை வினாயகரிடமே திருப்பிக் கொடுத்தார் கபிலர்.
கணாவை வென்ற பிள்ளையார் கணநாயகன் என்றும் அன்று முதல் அழைக்கப்படலானார்