பெண்மை - கவிதை போட்டி - 07 - சங்கீதா
பெண்ணென்று பூமியில் பிறந்து
ஆனந்தமாய் துள்ளி திரிந்த
முடிசூட இளவரசிகள் நாங்கள்!
பள்ளியிலே கல்வி கற்று,
கைவினைகள் பலவும் பெற்று
ஒழுக்கத்தை கேடயமாய் கொண்ட
பாரதத்தின் பெண்கள் நாங்கள்!
ஆணுக்கு பெண் நிகறென்று
வேளைகளில் மட்டும் அல்ல,
நாட்டின் சுதந்திர போராட்டத்திலும்
பங்கேற்ற பெண்கள் நாங்கள்!
வீட்டை நிர்வகிப்பது மட்டுமல்ல
நாட்டையும் நிர்வகிப்போம் என்று
துணிச்சலாய் எழுந்து நின்று
சாதித்த சிகரங்கள் நாங்கள்!
அன்பெனும் நூல் கொண்டு
நட்புறவு எனும் பூத்தொடுத்து
அழகியதாய் சமுதாயம் வளர்த்த
அரும்பெரும் காவியம் நாங்கள்!
அழகியதோர் காவியமும்
முடிவடையும் புள்ளிகளாய்,
கணவனெனும் புள்ளியிலே
முடிவுற்ற கவிதை நாங்கள்!
மனைவியெனும் பதவி பெற்று
அன்றாட பணிகள் புரிந்து
திறமைகள் யாவும் மறைக்கப்பட்டு
சுயம் தொலைத்த பெண்கள் நாங்கள்!
மணமான பெண்ணின்
நிழலாய் ஒளிந்திருக்கும்
திறமைகளும் கனவுகளும்
வெளிபடுவது எப்பொழுது!