பெண்மை - கவிதை போட்டி - 16 - மாலதி ராஜேந்திரன்
21ம் நூற்றாண்டின் நாகரிக மங்கை நாங்கள்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு கலந்த கலவை நாங்கள்
அடுப்பு ஊதும் பெண்களாய் இருந்த நாங்கள்
கல்வி என்னும் திறவுகோலால் நாடாளும் அரசிகள் ஆனோம்!
அன்றோ கள்ளி பாலால் சாகடிக்கப்பட்ட பெண்மை
இன்றோ பல துறைகளில் சாதனை நிகழ்த்தும் ராணிகளாய்!
ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு இருந்த பெண்மை
அறிவு சுடரால் வான்வெளியில் விந்தை பல நிகழ்த்தும்
விண்வெளி வீராங்கனைகளாய் ஆனதே!
அன்றோ வீட்டில் முடங்கி கிடந்த பெண்மை இன்றோ!
அநியாயத்துக்கு எதிராய் போராடும் போராளியாய் ஆனதே!
பாரதி கண்ட புதுமை பெண்ணாய் மாறினாலும்
இன்றும் குழந்தைக்கு பால் ஊட்டும் தாயாய்!
குடும்பத்தை திறம்பட நிர்வகிக்கும் நிதி அமைச்சராய்!
பொறுமைக்கு இலக்கணமாய்!
கற்பில் கண்ணகியாய் திகழ்கிறனரே!
எத்தகு சாதனைகள் நிகழ்த்தினாலும் இன்றும் நாட்டின்
ஒரு மூலையில் பெண்மையின் உயிர் மூச்சான கற்பு
காம மிருகங்களால் சூறையாடப்படும் அவலங்களும்
வயிற்றுப்பசிக்காக கற்பை விற்கும் இழி செயல்களும்
நிகழத்தான் செய்கின்றன!
முறையற்ற வாழ்க்கையால் அனாதை இல்லங்களும்
பெருகத்தான் செய்கின்றன!
பெண்மைக்கு கலங்கம் விளைவிக்கும் இழி செயல்களும்
அனாதை இல்லங்களும் அழியும் நாள் எந்நாளோ!
அந்நாளில் பெண்மை முழு முன்னேற்றம் அடையும்
அந்த பொன் நாளை காண பெண்மையை நேசிக்கும்
நாம் பாடுபடுவோம்!
வளமான பாரதம் அமைய வழிவகுப்போம்!