சும்மாயிருந்தால் போதுமா? - அனு.ஆர்
ஈன்ற பொழுதின்
பெரிதுவக்க வேண்டும்
பெற்ற அன்னை
என
புரிகின்றது
தன் மகனை
சான்றோன் என
கேட்கும் பொழுது.
ஏழு வயதிலிருந்து
எதிர் வீட்டு பெண் மீது
காதல்
ஏழாம் வகுப்பில்
பக(கி)ர்ந்து கொண்டோம்.
கல்வி முடிந்ததும்
கல்யாணம்
என
பதினாறு வயதில்
பருவ பாலகன்
தன் மகன்
பலர் முன்பு
பாடல் பெட்டியில்
பறை சாற்ற
கேட்கும் பொழுதுதான்
புரியவில்லை
அவள்
என்ன செய்ய வேண்டுமென?
பால்ய விவாகம்
பழைய கதை
படு மோசம்
என்றுதான்
நம்புகிறேன்.
பாலகர்களே
விவாகங்களை
முடிவு செய்யும்
இப் புதுமைக்கு (?!)
பழைய
பால்ய விவாகமே
பிரவாயில்லையோ (?!)
என்ற
நினைவை
தவிர்க்க முடியவில்லை!
பழைய
பால்ய விவாகத்தின்
பாடுகளை
மட்டுமல்ல
இப்புது
பால்ய விகாரங்களின்
பாடுகளையும்
மழலையர்
பள்ளி
முடித்தவுடன்
மகனுக்கும்
மகளுக்கும்
மனம் கிளராவண்ணம்
மனதிலேற்ற வேண்டுமா?
அல்லது
காதலின் எதிரிகள்
கடை நிலை
மாந்தர்கள்
கயவர்கள்
நீசர்கள்
காதல் செய்பவன்
கதாநாயகன்
நேசன்
அதை பேணி காப்பவன்
நல்லவன்
வல்லவன்
நாலும் தெரிந்தவன்
என்றவிதமாக
சித்திர காட்சிகளை
செயல் முறை விளக்கத்துடன்
தினம்தோறும் காண்பித்துவிட்டு
தெய்வமே காக்க காக்க
என்றதோடு
சும்மாயிருந்தால்
போதுமா?