கற்பு - ஜான்சி
கற்பு என்பது விலைப் பொருளா ?
இல்லை அழிந்திட விளைப் பொருளா?
பட்டாம்ப் பூச்சியின் வண்ணங்கள் போலே எண்ணங்கள் கொண்ட மங்கையவள்;
தீய எண்ணங்கள், நாட்டங்கள் கொண்ட கயவன் அவன்.
அன்று நிகழ்ந்தது ஒரு வன்முறை அரங்கேற்றம்;
சூறையிடப்பட்டது அவள் மனக் கனவுகளின் மலர்த் தோட்டம்.
சாலை விபத்தில் மீண்டவர் பெறுவர் அனைவரின் பரிவை ;
ஆனால், பாவி இந்நங்கை பெறுவதுவோ பரிகாச பார்வை.
அடிப்பட்ட பறவைப் போல் அவள் தவித்திருகக;
அவள் கற்பிழந்தவள் என உலகம் துன்புறுத்தும்.
ஊனமுற்றோர்க்கு நல்வாழ்வு தரும் மனங்கள்;
இவளுக்கு தந்திடவே மறுத்திருக்கும்.
கள்வனுக்கு பொருட்களை பரிசளிக்கும் வழக்கம் நம்மிலே என்றும் இல்லை அன்றோ!!
பின்னர் கயவன் துன்புறுத்திய மகள் அவளை அவன் கையில் ஒப்படைப்பதில் நியாயமுண்டோ?
கற்பு என்பதை அவள் இழக்கவில்லை;
ஏனெனில், அவள் உள்ளத்திலே அங்கு கள்ளமில்லை.
லட்சோப லட்சங்கள் வார்த்தை கொண்ட என் தாய் தமிழ் மொழியில்,
கற்புக்கு ஆண்பால் வார்த்தை இல்லை.
"கற்பழிப்பு" வார்த்தை வேண்டாம் நமக்கு;
அதை அகராதியிலிருந்து இன்றே அகற்று.
Chillzee "KNV " தொடரின் நாயகி பிரியா கதாப் பாத்திரம் இக்கவிதைக்கு தூண்டுதல். அது போலவே ஒரு தவறும் செய்யாமலே உடல், மன ரணங்களால் துன்புறும் அனைத்து சகோதரிகள் ,சின்னஞ் சிறு தளிர்கள் அனைவருக்கும் என் கவிதை சமர்ப்பணம்.