(Reading time: 2 - 3 minutes)

காதல் என்று பெயரிடாதே ! - புவனேஸ்வரி 

love

இரவில் நிலவில்  உன் முகம்

 தேடி ஓய்ந்துப்போய்

வாட்ஸ் அப்பில் உன் படத்தை தேடி

இமைக்காமல் சில நொடிகள் பார்ப்பதும்

 

காலையில் அதே கைப்பேசியில்

உன் குறுந்தகவலை தேடி

குறுநகையுடன் படித்து

பதில் அளிப்பதும்

 

இறைவனிடம் கோரிக்கைகளை அடுக்கும்போது

எனக்கு முன் உனக்காக வேண்டுவதும்

வேண்டுதல் நடந்துவிட்ட  பட்சத்தில்

உன்னைவிட அதிகமாய் உவகை கொள்வதும்

 

உன்னை பற்றி பேசுகையில்

உற்சாகம் கொள்வதும்

உன்னை பற்றி தவறாய் பேச்சு வந்தால்

பேயாட்டம் ஆடுவதும்

 

உன்  பேரை  கேட்டாலே பூமழையில்

திகட்டாமல் நனைவதும் '

ஒவ்வொரு உரையாடலிலும்

உன்னைபற்றியான பேச்சுக்களை  தேடுவதும்

 

உன்  வார்த்தைக்காக 

மணிக்கணக்காய் தவமிருப்பதும்

உன் அருகாமையில்

மௌனமாய் கவிவடிப்பதும்

 

உன் இன்பங்களில்

நான் குளிர் காய்வதும்

உன் துன்பங்களில்

நான் தீக்குளிப்பதும்

 

உன் விருப்பங்களை

நான் நேசிப்பதும்

உன் அசௌகரியங்களை

நான் சீர்செய்வதும்

 

நீ விழித்திருக்கும்போது

" உறங்கிடு "என கொஞ்சுவதும்

நீ உறங்கும்போது

"சீக்கிரம் விடியட்டும் "என கெஞ்சுவதும்

 

நீ இருக்கும்போது

என்னை உணர்வதும்

நீ இல்லாத வேளைகளில்

நம்மை உணர்வதும்

 

"காதல் " என்று பெயரிடாதே !

காதலித்தால் இது எனது கடமையென ஆகிவிடும் ..

உன்னோடு நான் கழிக்கும் நாட்கள்

கடமையல்ல ..அவை ,

என் வாழ்நாட்களின் தவம் ...

 அந்த தவத்திற்கு பெயரும் வேண்டாம் முகவரியும் வேண்டாம் ... !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.