காதல் என்று பெயரிடாதே ! - புவனேஸ்வரி
இரவில் நிலவில் உன் முகம்
தேடி ஓய்ந்துப்போய்
வாட்ஸ் அப்பில் உன் படத்தை தேடி
இமைக்காமல் சில நொடிகள் பார்ப்பதும்
காலையில் அதே கைப்பேசியில்
உன் குறுந்தகவலை தேடி
குறுநகையுடன் படித்து
பதில் அளிப்பதும்
இறைவனிடம் கோரிக்கைகளை அடுக்கும்போது
எனக்கு முன் உனக்காக வேண்டுவதும்
வேண்டுதல் நடந்துவிட்ட பட்சத்தில்
உன்னைவிட அதிகமாய் உவகை கொள்வதும்
உன்னை பற்றி பேசுகையில்
உற்சாகம் கொள்வதும்
உன்னை பற்றி தவறாய் பேச்சு வந்தால்
பேயாட்டம் ஆடுவதும்
உன் பேரை கேட்டாலே பூமழையில்
திகட்டாமல் நனைவதும் '
ஒவ்வொரு உரையாடலிலும்
உன்னைபற்றியான பேச்சுக்களை தேடுவதும்
உன் வார்த்தைக்காக
மணிக்கணக்காய் தவமிருப்பதும்
உன் அருகாமையில்
மௌனமாய் கவிவடிப்பதும்
உன் இன்பங்களில்
நான் குளிர் காய்வதும்
உன் துன்பங்களில்
நான் தீக்குளிப்பதும்
உன் விருப்பங்களை
நான் நேசிப்பதும்
உன் அசௌகரியங்களை
நான் சீர்செய்வதும்
நீ விழித்திருக்கும்போது
" உறங்கிடு "என கொஞ்சுவதும்
நீ உறங்கும்போது
"சீக்கிரம் விடியட்டும் "என கெஞ்சுவதும்
நீ இருக்கும்போது
என்னை உணர்வதும்
நீ இல்லாத வேளைகளில்
நம்மை உணர்வதும்
"காதல் " என்று பெயரிடாதே !
காதலித்தால் இது எனது கடமையென ஆகிவிடும் ..
உன்னோடு நான் கழிக்கும் நாட்கள்
கடமையல்ல ..அவை ,
என் வாழ்நாட்களின் தவம் ...
அந்த தவத்திற்கு பெயரும் வேண்டாம் முகவரியும் வேண்டாம் ... !
{kunena_discuss:779}