(Reading time: 1 - 2 minutes)

அழகு - ஜெனிட்டா

அந்திவானில் முக்குளித்து,

நீலாடை பூண்ட

வான்மதி மயக்க,

தன்னிலையிழந்து கிறங்கி

அவளின் இன்பலோகத்தைக் கவரும்

ஆதவனின் கிரணங்கள் அழகு!

 

        ஆழித்தாயின்அன்பை ஆய...

        ஆத்மபந்தத்தால்அவளை சீண்ட

        கரம் விட்டோடி கரை தீண்டும்

        அலைதனின் சீண்டல் அழகு !

 

தாவணியின் காலம் தேய

தாலியின் பந்தம் பகிர,

தாரத்தின் தாயமாய்

கட்டிலறைச் சுகத்தின்

கருவறைச் சுவர்கத்தை

வையத்தில் தளிர,

வைகறையின் நாழி எண்ணி

நாணத்தில் இழைந்தோடும்

பெண்ணின் நிறை மாத நடை அழகு!

 

      பாலாடையில் கரும் பழமாகி,

      வெள்ளையாற்றில் அசைந்தோடி

      இமைக்காவலன் காதலில் இலக்காகி

      அவன் இன்பச் சிறையில்

      கைதியாய் சிறையிருக்கும்

      கண்ணின் கருவிழி அழகு!

 

மோகத்தின் மாலையில்

மேகத்தின் ஸ்பரிசத்தால்

கார் கூந்தலால் மேனி மறைக்கும்

அமாவாசையின்-இதமான இருள் அழகு!

 

     அழகுக்கு அழகு கோர்த்து,

     வார்த்தைக்கு வனப்பு சேர்த்து,

     பொய்க்கு மெய்யை வார்த்து,

     கவிஞனின் கையெழுத்தில்

     காவியம் படைக்கும்

     கவிதைக்கு அழகே தனி அழகு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.