காத்திருக்கிறேன் உன் வருகைக்காக... - முத்துலட்சுமி
என்னவனை காண செல்லும்
இத்தருணத்திலா அவள் உரைக்கவேண்டும்
இத்தகு வார்த்தைகளை.
காத்திருந்தேன் அவன் வருகைக்காக
நொடிகள் யுகங்களாகி நகர்ந்த நேரங்களில்
அவன் நினைவுகளில் லயித்து,
காத்திருப்பதின் ருசி அறிந்தேன்.
காத்திருந்த நாளும் வந்தது,
செல்ல எத்தனிக்கையில்,
தோழி உரைத்தவை இவை:
தினமும் உன் அருகில் இருந்து உன்னை கண்டவள் நான்,
அவனுக்காக உன் உடலை உருக்கி தவமிருந்தவள் நீ..
அனுதினமும் அவன் நாமத்தை அர்ச்சித்தவள் நீ...
உன் சுவாசம் அனைத்தும் இருந்தது ஏக்க பெரு மூச்சுக்களாய்...
நீ அவன்பால் வைத்த அன்பில்
சிறிதளவேனும் அவனுக்கு உன்மேல் இருந்தால்
உன்னவன் உன்னை காண வரட்டும் இங்கு.
மறுப்பேதும் கூறேன் நான்.
ஆனால், உன்னை போக அனுமதியேன்.
மகிழ்ச்சி பொங்கிய மனக்கடலில்
ஆழிப்பேரலையாய் வந்து விழுந்த இக்கட்டளையை
ஏற்கவும் மனமில்லாமல், தவிர்க்கவும் வழியில்லாமல்
காத்திருக்கிறேன் உன் வருகைக்காக.....
வழிமீது என் விழி வைத்து.
{kunena_discuss:779}