கடனாக கல்வி வேண்டும் - சிந்தியா
ஐயிரண்டு வயதெமக்கு ஏனோ
தாயென்று அழைத்திடும் சொல்லறிவோம்
கையால் எழுதிடவோர் எழுத்தறியோம்
பிறரருண்ணும் இலை எடுத்தோம்
காசுள்ளோர் வாழ்ந்திருக்க எங்கள்
கையடங்கா கல்லெடுத்துக் காயங்கண்டோம்
ஒளி வந்தால் இருளழியும்
கூற்றிங்கே பொய்யென் றுணர்ந்தோம்
தீபாவளி நன்நாளில் ஒளியேற்றும்
தீப்பெட்டிகள் செய்தெங்கள் உள்ளங்கை
சூடுபட்டு ஊதிஊதி உழலுகின்றோம்
நீராடி தலைசீவி பையெடுத்து
பள்ளிச் செல்லும் பருவங்கொண்டும்
ஆடையின்றி அன்றுணவின் வழிதேடி
நாளை மலரும் வாழ்வென்று
சாலைகளில் பூக்கள் விற்றோம்
புத்தகத்தின் வாசத்திற்காய் ஏங்கிநின்றோம்
நாடுயரும் செய்தி சொல்லும்
நாளிதழ்கள் வீசிவீசி எங்கள்
வீடுயர நாள்மறந்து ஓடுகின்றோம்
பாடங்கள் படிக்காமல் நாங்கள்
சுவரொட்டிகள் தூக்கித் திரிந்தே
உயிர்க்கூட சுமையாக உடல்நொந்தோம்
வாரமெல்லாம் வாழ்வே வேடிக்கையாய்
பாறைகள் உடைத்து புவிமீதினில்
பாரங்கள் ஆனோம்-பிள்ளைகள்
நாங்களென்ற பொருள் தொலைத்து
இல்லாதோர் என்ற புதுப்பெயர்கொண்டோம்
உடுத்திக்கொள்ள நல்லுடை கேளோம்
படுத்துறங்க பட்டுமெத்தை வேண்டோம்
சுவைத்து கண்சிரிக்க உணவதுவும்
நாங்கள் என்றும் கேளோம்
விதி விதித்த வழித்தடம்
துடைத்து விண்ணேறி சுடர்விட
வீணை தனை ஏந்தியவள்
வீடுவர வேண்டு கின்றோம்
{kunena_discuss:779}