(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காலம் கடந்தும் கலாம்  - குணா

kalam.jpg

மானிடம் போற்றும் மாமனிதா!

மதம் கடந்த மாற்றானாய்
நம்பிக்கையின் ஊற்றானாய்
இளைஞர்களின் ஆசானாய்

இல்லறம் துறந்து
பல நல்லறம் தந்தவனே
ஈகை குணத்தில்
உண்ணலம் துறந்தவனே

வாழும் போது ஒளி தந்து
மறைந்த பின்னும் வழி தந்து
விந்தை உலகின் மாயவனே
கொஞ்சமும் மாசற்ற தூயவனே

குழந்தை சிரிப்பில் தாலாட்டி
கொள்கை பிடிப்பில் நீரூற்றி
சாதி மதம் நீ கடந்து
பல சாதனை மரங்களை நட்டாயே

விதைக்குள் புதைந்த வீரியத்தை
உன் புத்தக வடிவில் மீட்டெடுத்து
அக்னி சிறகாய் நீ இருந்து
பல அற்புத சாதனை படைத்தவனே

நானிலம் போற்றும் நல்லவனே!

முதல் குடிமகன் ஆனபோதும்
முறைதவரா தூயவரே
தலைமுறை கடந்த தலைமகனே
உன் தடங்களை தொடரும் வெகுசனமே

காசு பணங்கள் சேர்க்காமல்
காரணம் காரியம் தேடாமல்
கடமை ஒன்றே என்றிருந்தாய்
கண்ணியச் செல்வன் நீதானே

விண்ணுலகம் சென்றாலும்
விண்மீனாய் ஒளிவிடுவாய்
உனைப் போல் ஒருபிறப்பை
இவ்வுலகம் இனியறியா

கண்ணீர் சிந்தி
கண்களே அழுதிட
காயங்கள் சொல்லி
வார்த்தைகள் தேம்பிட

உம் பாதம் பணிந்து நின்று
உம் பாதையில் பயணிக்கிறோம்..!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.