கவிதை - விதவையின் விவாதம் - குணா
கலியாணக் கோலம் கலைந்தவளோ ..
கட்டிலின்பம் தொலைத்தவளோ ...
தொட்டில் கரு கலைந்தவளோ ..
தொப்புள் கொடி தொலைத்தவளோ ...
குங்கும கூடாரம் கைவசமிருந்தும்
துளி குங்குமம் தொடாதவளோ ...
தண்ணீர் தெறிக்க விட்டு
புது சீமாறு தொடைக்க விட்டு
மாட்டு சாணம் தெளித்து
மங்கலமாய் உடை உடுத்தி
வண்ணம் பல தேடி
மருதாணி நிறமெடுத்து
மங்கலமாய் போட்ட
ரங்கோலி கோலமொன்று
தண்ணீர் லாரி வந்து
பீச்சிட்டு அடிச்ச போது
கலைஞ்சிட்ட கோலமா?
என் கோளம்.......
வான் மழையில்
சிறு பில்லும் பிழைத்திருக்க
என்னிடம் மட்டுமோ
பொய்த்து போகிறதோ ?
பொதுவுடைமை நீல வானம்
என் கண்களில் மட்டும் மீளா வானமோ?
வீசிடும் காற்று
சிறு துவாரமும் நுழைந்திட
முன் நிற்கும் என்னை மட்டும்
தீண்டாமை செய்கிறதோ?
சிறந்த மெட்டமைத்து
சிங்கார பாட்டெழுதி
பூங்குயில் பாடிய
தேவ ராகம்
கேட்கும் முன்னே
குயிலின் குரல்வலை
கயிறு வந்து நெரித்ததோ ?
இனி நா என்ன செய்ய......
புதுமைப் பெண்ணாய்
புதுச் சிந்தனை செய்யவா ..
அப்படி யெனில்
இச் சமூகம்
மலர் கொடுத்து வரவேற்குமா?
இல்லை
மலர்வளையம் போட்டு தடுக்குமா ..?
பாவம் என்று தோள் கொடுக்குமா?
இல்லை தாசி என்று
நெஞ்சு கிழிக்குமா?
சிற்றுயிரும் துணை தேடும் ..
இச் சித்தாந்தம் புரிந்திடுமா?
மறு மணமா?
மறுக்கும் மனமா ?
சமூகமே நீயே சொல் ?
இங்கு வலியுடன் யாரும் கேட்பதில்லை..
வலியவரிடமே கேட்கிறார்கள் ..
நீங்களே சொல்லுங்கள் ......
விதவை என்று விலக்குவீர்களா..???.
கைம்பெண் என்று கரம் கொடுப்பீர்களா.. ???