கவிதை - துணை எதற்கு? - ப்ரியசகி
பெண்ணே உன்னை பார்வையாலே துகிலுறியும் வஞ்சகர்களை
எரிக்க உன் அனல் கக்கும் இரு விழிகளின் தீப்பார்வை போதாதா?
பேருந்தில் உன் பொன்மேனி உரசும் அக்கயவர்களின்
கன்னங்களை பதம் பார்க்க உன் கைகளோ காலணிகளோ போதாதா?
உன்னை கேலி பேசும் இவ்வுலகிற்கு துணிந்து நின்று
பதில் உரைக்க உன் தைரியமும் பொறுமையும் போதாதா?
உன்னால் முடியாது என்று பேசுபவர்களுக்கு, அதை அவர்களுக்கு
முன்னால் முடித்துக் காட்ட உன் மனவலிமை, விடாமுயற்சி போதாதா?
அமைதியாக இருக்கும் வரை நீ என்றும் அடிமை தான் ஏனெனில்
இவ்வுலகம் என்றும் உனக்குத் துணை நிற்காது
உனக்கு நேரும் அநியாயங்களை அக்கணமே
எதிர்த்துப் போராட கற்றுக் கொள்
இப்போது நீ பெண், துணிந்து விட்டால் பெண்சக்தி!!!
ஆபத்து நேரும் போது நீயே உனக்குத் துணை
துணிவுள்ள உனக்கு வேறு துணை எதற்கு?
நீயே துணை தேடுபவர்களுக்குத் துணை....