கவிதை - வாழு வாழ விடு - கோகுலப்ரியா
ஓரறிவு முதல் ஆறறிவுள்ள
உயிர்கள் வாழும் இப்புவியில்
எம் சமுதாயம் மட்டும் வாழ
தகுதியட்ரதேனோ!
ஈன்றோர் இருந்தும்
யாருமட்ற அனாதைகளாக வீதிக்கு
விரட்டபட்டதேனோ!
சொந்தம் பல இருந்தும்
இவ(ள்)ன் என் சொந்தமென
செல்லம் கொஞ்ச எவருமில்லாமல்
போனதேனோ!
தம்பி தங்கைகள் இருந்தும்
இவ(ள்)ன் என் உடன்பிறந்தவ(ள்)ன்
என அனைவரிடமும் சொல்ல
வெட்கபடுவதேனோ!
என் வயிற்று பசி தீர்க்க
பலர் உடற்பசித் தீர்த்து
இன்று வேசியாய்
மாறியதேனோ!
கல்விக்காக புத்தகங்களை
கையேந்துவதற்கு பதிலாக இன்று
கலவிகாக காண்டம்களை
கை எந்தியதேனோ!
நன்கு அலங்கரித்து
அழகான உடை உடுத்தி
வீதியில் உலா வரும்பொழுது
ஒன்பது, அலி, உஸ், அரவாணி என
கேலிப் பேச்சுகள்
பேசுவதேனோ!
எம்மை
உன் மக(ள்)ன் என அடையாளப்படுத்த வேண்டாம்
திருநங்கை என எள்ளி நகையாட வேண்டாம்
அர்த்தனாதி என போற்ற வேண்டாம்
கடவுளால் பாரபட்சமின்றி படைக்கப்பட்ட
இப்ப்புவியில் நீயும் வாழு
எம் சமுதாயத்தையும் வாழ விடு !!