கவிதை - ராணுவ வீரனின் மனம் - கோகுலப்ரியா
வருடம் ஒரு முறை கிடைக்கும்
விடுமுறைக்காக வருடம் முழுவதும்
காத்திருக்கும் மனம்
விடுமுறை நாட்கள்
மேலும் நீடிக்காதா என
ஏங்கும் மனம்
சொந்த பந்தங்களுடனே அங்கே
தங்கி விட முடியாதா என
பரிதவிக்கும் மனம்
தன் வெளிப்படா ஆசைகளை
தன்னுள் புதைத்து அனுதினமும்
குமுறும் மனம்
மனதில் ஆயிரம் வலிகள்
ஆயினும் மகிழ்ச்சி கொள்கிறது மனம்
தன் குடும்பத்தை பார்க்கும் பொழுது
குடும்பத்துடன் செலவிடும் நேரம்
குறைவுதான் என்றாலும்
அவர்களுடனே செலவழித்த நேரங்களை
நினைவுகளாய் சேகரித்து வைக்க
தவறியதில்லை மனம்
தன் பயண மூட்டையுடன்
தான் சேர்த்து வைத்திருந்த
நினைவுகளையும் உடன் எடுத்து செல்கிறான்
மீண்டும் அடுத்த விடுமுறை வரும்வரை
அந்த நினைவுகளுடனே அவன் வாழ்க்கை...