"அவன் எப்போதும் இப்படித்தான் இடக்குச் செய்வான்."
"ஏன்? வார்தாவுக்குப் போய் வந்து விட்டானோ?"
"அப்படியானால், அந்த மலம் வாருகிறார்களே அப்படி அய்யா இங்கேயும் அந்த வேலையைச் செய்வதுதானே?"
"இவர் இங்கே படிக்க வந்தாரா? சிறுநீர் அறையை மேற்பார்வை பார்க்க வந்தாரா?"
இவ்வாறு பலர் பலவாறு பேசவும், செயலாளர் எழுந்து "அன்புகூர்ந்து அமைதியாக இருக்கும்படியாக வேண்டுகிறேன். இப்படிப் பலர் பலவாறு பேசினால், நாம் கூடிய கடமை ஆகுமா? பாராளுமன்றங்களின் தோற்றம், வளர்ச்சி, விதிகள், பயன்கள் எல்லாவற்றையும் விரிவாகப் படிக்கிறோம். பேசுகிறோம். ஆனால் நம் வாழ்க்கையில் அந்த முறைகளைப் போற்றிக் கையாளாவிட்டால் பயன் என்ன?" என்றார்.
ஆயினும் அவர் பேச்சால் பயன் விளையவில்லை. மறுபடியும் மாணவர்கள் பலவாறு குரல் எழுப்பத் தொடங்கினார்கள். விடுதிச் செயலாளரைப் பற்றியும் தாக்கிப் பேசினார்கள்.
"ஓஓ! செயலாளர் சாந்தலிங்கத்தின் நண்பரோ?"
"கல்லூரியின் பெயரை இவர்தான் காப்பாற்றப் போகிறாரோ?"
"சிறுநீர் அறையைக் காப்பாற்றினால்தான் கல்லூரியின் பெயரைக் காப்பாற்ற முடியுமா? சரிதான்."
"இந்த ஆள் போன பிறவியில் தோட்டியாக இருந்திருப்பான்."
"அய்யாவின் முகவரியை யாராவது முனிசிபாலிடிக்குத் தெரியப்படுத்தினால் ஒரு வேலை கொடுப்பார்களே!"