பதிலுக்குக் கமலா விடம் என் அந்தரங்கங்களைச் சொன்னேனா? கல்லூரிப் படிப்பும் வழக்கறிஞராகத் தொழில் நடத்துவதும் அந்த அளவுக்கு ஒரு போலி கௌரவத்தை வளர்த்து வார்த்தைகளுக்கு வரம்பு கட்டுகின்றன!
'கமலாவைப் போலவே நானும் பள்ளிப் படிப்பையே பாதியில் நிறுத்தியிருக்கலாமோ?
சேச்சே! கல்லூரிப் படிப்பு இல்லாதிருந்தால் உமாகாந்தை என்னால் எப்படி சந்தித்திருக்க முடியும்? அவர் காதலைப் பெறும் பாக்கியத்தை எப்படி அடைந்திருக்க முடியும்? அந்த ஆனந்தமான ஆண்டுகளை எண்ணும் போதே மேனி சிலிர்க்கிறதே! இப்போது அவரைப் பிரிந்து துயருற்றாலும் என்றாவது ஒரு நாள் அவரை மீண்டும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையே எத்தனை இனிமையான ஓர் அனுபவமாகவும் இருக்கிறது! கல்கத்தாவில் அவருடன் நெருங்கிப் பழகிய அந்த இரண்டு ஆண்டுகளைத் திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொணர்ந்தே இருபது வருஷங்களை ஓட்டி விடலாமே!'
இத்தனைக்கும் அவள் பி.ஏ. படித்த அந்த இரண்டு ஆண்டுகளிலும் உமாகாந்துடன் அடிக்கடி கொஞ்சிக் குலவி மகிழ்ந்து கொண்டிருக்கவில்லை. அவன் அருகில் இருக்கிறான். அதே கல்லூரியில்ல் எம்.ஏ. வகுப்பில் சரித் திரப் பிரிவில் படிக்கிறான். தன்னை விரும்புகிறான். தன்னைச் சந்திக்க நேரும்போதெல்லாம் சிரித்துப் பேசுகிறான் என்ற சூழலே போதுமானதா யிருந்தது.
அன்றைக்கே அவன் லட்சியவாதி. கதர் தான் உடுத்துவான். சுதந்திர இயக்கத்தில் இயன்ற அளவில் பங்கேற்பான். "படிப்புக்குக் குந்தகம் ஏற்படாத அளவில் நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று அவனது பெற்றோர்களுக்கு மேலாக அவளும் வற்புறுத்துவாள்.
"பொய்யான சரித்திரத்தை எழுதி வைத்திருக்கிறார்கள் ஆங்கிலேயர். இதைப் படித்துப் பட்டம் பெற்றுத்தான் என்ன லாபம்?" என்று கேட்பான் உமாகாந்த். "சரித்திரத்தை ஒரு நாள் நான் மாற்றி எழுதிக் காட்டுகிறேன், பார்!" என்பான்.
அப்படி மெய்யாலும் ஒரு சந்தர்ப்பம் நிகழவே செய்தது! காலாண்டுப் பரீட்சையின் விடைத் தாள்களைத் திருத்திக் கொடுத்திருந்தார் பேராசிரியர். அதைக் கொண்டுவந்து பவானியிடம் காட்டினான் உமாகாந்தன். அவன் முகத்தில் குறும்புப் புன்னகை தவழ்ந்தது. பெரிய கோழி