Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 26 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 26 --- நீரில் மிதந்த விழிகள்
சற்றுத் தூரம் போகும் வரை இருவரும் பேசவில்லை. பிறகு இருவரும் ஒரே சமயத்தில், "ஏன் இவர்கள் இவ்வளவு மோசமானவர்களாக..." என்று பேச்சை ஆரம்பித்தார்கள். உடனேயே இருவரும் மற்றவர் பேச அனுமதித்து வாக்கியத்தைப் பாதியில் நிறுத்திக் கொண்டார்கள். மீண்டும் இருவரும் ஒரே சமயத்தில், "என்ன சொன்னீர்கள் ?" என்று கேட்டார்கள்.
இதையடுத்து இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது. பலமாகச் சிரித்த பவானி, ஒருவாறு அது ஓய்ந்ததும், "சிரிக்கவே கூடாது, நான். அந்தப் பெண்ணைப் பார்த்தால் அத்தனை பரிதாபமாக இருக்கும்போது நான் சிரிப்பதே பாவம்" என்றாள். அப்புறம் முதலில் கேட்க ஆரம்பித்துப் பாதியில் நிறுத்திய கேள்வியை மீண்டும் கேட்டாள். "ஏன் இப்படி இவர்கள் இவ்வளவு மோசமாகத் திடீரென்று நடந்து கொண்டார்கள்?"
"விட்டுத் தள்ளுங்கள், அநாகரிகமான ஜனங்கள். படிப்புக் கிடையாது, நாகரிகம் கிடையாது, நல்ல மனிதர்களோடு பழக்கம் கிடையாது. தெரிந்த லட்சணம் அதுதான்" என்றான் கல்யாணம்.
"அதொன்றுமில்லை. நேற்று வரை நல்லபடியாகத்தானே நடந்து கொண்டார்கள்?"
"தரித்திரமும் கஷ்டமும் இப்போது அதிகமாகிவிட்டது. அது காரணமாயிருக்கலாம்."
"இந்தக் குடும்பத்தைப் பார்த்தால் எனக்கு 'ஐயோ பாவம்' என்றிருக்கிறது. நீங்கள் ஏதும் உதவி செய்யக் கூடாதா?"
"ஓரளவுக்குத்தான் உதவலாம். எவ்வளவுதான் செய்ய முடியும்? ஒரு குடும்பத்தை என்றென்றைக்கும் தாங்குவது சாத்தியமா? அவரவர் காரியத்தை அவரவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்."
"எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது."
"என்ன யோசனை?"