Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 48 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 48. -- வேதனையில் ஒரு வாலிபன்.
மறுநாள் காலை தீப்பெட்டியில் பாக்கியிருந்த நாலு குச்சிகளை கமலா யாரும் அறியாமல் குப்பையில் போட்டுவிட்டு, நெருப்புப் பெட்டி வாங்கி வருவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டாள். "விசுவை அனுப்பேன்" என்றாள் காமாட்சி. "வீட்டில் தலைக்கு மேல் காரியம் இருக்கே."
"எனக்கு ஹோம் ஒர்க் இருக்கு" என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தான் விசு.
"சமர்த்து" என்று தனக்குள் அவளை வாழ்த்தினாள் கமலா. கண்ணாடியில் தன் அழகை இன்னொரு தடவை பார்த்துக்கொண்டாள். சாகும்போது பிரமாதமாகத் தன்னை அலங்காரம் பண்ணிக்கொண்டு இறக்க வேண்டும் என்று அவள் இரவெல்லாம் யோசனை செய்து தீர்மானித்துருந்தாள். எனவேதான் இன்று காலை குளித்துவிட்டுத் தனக்குச் சமீபத்தில் வாங்கப்பட்ட புதிய புடவைகளுள் அதிக ஆடம்பரம் இல்லாத ஒன்றைப் பார்த்து உடுத்திக் கொண்டாள். வழக்கத்தைவிட அதிகமாகவே இரண்டாவது முறையாகப் பவுடரைப் போட்டுக்கொண்டு அப்புறம் விகாரமாகிவிட்டது என்று துண்டால் ஒற்றி எடுத்தாள். குங்குமம் 'பளிச்'சென்று நெற்றியில் இலங்கியது. மை தீட்டிய விழிகள் மானின் பார்வையை வென்றன. செண்ட் மணம் கமகமத்தது!
இரவு படுத்திருக்கும்போது ஒரு தீர்மானத்துக்கு வரத்தான் தாமதமாயிற்று. தீர்மானத்துக்கு வந்த பிறகு அவள் அமைதியாக உறங்கினாள். இப்போது உற்சாகமாகக் கிளம்பினாள். அவள் நடையிலே எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறப் போகிற உல்லாசத் துள்ளல் இருந்தது. இந்த உலகை, அதன் அழகுகளை முதல் தடவையாகப் பார்ப்பவள் போல் அகன்று விரிந்த கண்களால் நோக்கி ரசித்தாள். சூரியோதயம், பட்சிகளின் கானம், சற்றுத் தூரத்தில் தெரிந்த மலைகள், அவற்றின் பசுமை, மலை முகடுகளில் சிரமப் பரிகாரம் செய்ய அமரும் மேகக் குவியல்கள் எல்லாவற்றையும் 'இதுதான் கடைசித் தடவை' என்று எண்ணியபடியே பார்த்தாள். கூடவே, மனத் திரையில் கல்யாணத்தின் சுந்தரமான வதனம் தெரிந்தது. அதனையும் உள்ளத்தின் கள்ளத்தால் அள்ளி விழுங்குபவளாகப் பார்த்தாள். "போய் வருகிறேன்" என்று அவனிடம் விடைபெற்றுக் கொண்டாள்.
மலைப் பாதையில் சற்றுத் தூரம் ஏறிய பஸ், ஒரு குக்கிராமத்தில் நின்றது. அங்கேதான்