Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 52 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 52. -- அடிபட்ட புலி!
நிறைய இரத்தம் இழந்திருந்த போதிலும் கடுமையான ஜுரம் அடித்தபோதிலும் உமாகாந்த் இரண்டு மூன்று தினங்களில் குணமடைந்தான். டாக்டரின் மருந்தைவிடப் பவானியும் அவளிடம் மிகவும் பிரியமுள்ள மாமா குணசேகரனும் பார்த்துப் பார்த்துச் செய்த பணிவிடைகளினால்தான் பிழைத்தான் உமாகாந்த்.
முதன் முதலாக அவன் கண் இமைகள் படபடத்தபோது பவானி அருகில் இருந்தாள். அவளைக் கண்டதும் முகமலர்ச்சியுடன் எழுந்திருக்க முயன்றான். அந்த முயற்சியிலேயே அவன் மறுபடியும் பலவீனமடைந்து மூர்ச்சையானான். பவானி பதறினாள், விம்மினாள், துடித்தாள்.
மாமா குணசேகரன், "நீ இப்படித் தவிப்பதால் அவனுக்கு எந்த உபயோகமும் இல்லை. எவ்வளவோ படித்த பெண்ணாகிய உனக்கு இது ஏன் புரியவில்லை?" என்று கடிந்துகொண்டார். "'நாட்டுப் பற்று என்ற நங்கையை மணந்து, மாமியார் வீடே கதி என்று இருக்கிறான் என் காதலன்' என்றாயே, இவன்தானா?" என்று கேட்படியே சிறிது தண்ணீரை உள்ளங்கையில் எடுத்து அவன் முகத்தில் தெளித்தார்.
உமாகாந்தனுக்குப் பிரக்ஞை வந்தது. பவானியைப் பார்த்துப் புன்னகை புரிந்தான்.
பவானி அவன் மறுபடியும் மயக்கம்போட்டுவிடப் போகிறானோ என்ற கவலையுடன் சொர சொரவென்று முரட்டுத்தனமாக இருந்த அவன் கரத்தை எடுத்துத் தன் பளிங்குக் கன்னத்தில் ஒற்றிக் கொண்டாள். கண்ணீரால் அந்த விரல்களைக் குளிப்பாட்டினாள்.
"பவானி! உன்னிடம் ஓர் உண்மையைச் சொல்லிவிட்டுப் போவதற்காக வந்தேன்" என்றான் உமாகாந்தன், ஈன சுரத்தில்.
"நீங்கள் ஓர் உண்மையையும் கூற வேண்டாம். நாலு வருஷங்களுக்குப் பிறகு நீங்கள் என்னிடம் திரும்பி வந்து சேர்ந்துவிட்டீர்கள். எனக்கு இந்த உண்மை ஒன்றே போதும்!" என்றாள் பவானி.