Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 61 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 61 -- பயணம் முடிந்தது!
"இந்த ஆபத்தான பயணத்தை என்னுடன் சேர்ந்து நீயும் மேற்கொண்டிருக்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, பவானி! ஏதோ கனவு போலிருக்கிறது" என்றான் உமாகாந்தன்.
காரை வெகு வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த பவானி, "கனவாகவே முடிந்து போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கல்யாணம் ரொம்பக் கோபமாகத் திரும்பிப் போயிருக்கிறார். என்ன செய்வாரோ தெரியாது. கோடிக்கரையை நாம் அடைந்து உங்கள் திட்டப்படி கள்ளத்தோணியில் ஏறிய பிறகுதான் எதையும் நிச்சயமாகத் தீர்மானிக்கலாம்" என்றாள்.
"பாவம், உன் மாமா குணசேகரன் நிலைமைதான் ரொம்ப தர்மசங்கடமாகப் போய்விட்டது. அவரை நம்பித்தானே உன் பெற்றோர் உன்னை ராமப்பட்டணத்துக்கு அனுப்பி வைத்தார்கள்? பெரிய பொறுப்பு இல்லையா அவருக்கு? உன் பெற்றோருக்கு அவர் என்ன பதில் சொல்வார்?"
"ஆறு பெருகெடுத்தோடிக் கடலில் சங்கமமாகிவிட்டது என்று கூறட்டும்; மொட்டு வெடித்து மலர, மணம் காற்றோடு கலந்தது என்று சொல்லட்டும். பருவ மழை உரிய காலத்தில் பெய்தது. பூமி குளிர்ந்தது என்று விளக்கட்டும். இந்த இயற்கை நியதிகளை மாற்ற முடியுமானால்தான் நான் உங்களை அடைவதை அவர்களால் தடுக்க முடியும்."
கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஆர்வத்துடன் உமாகாந்தன் பவானியின் இடக்கரத்தைப் பற்றினான்.
"உம்....உம்...! விளையாட்டெல்லாம் இப்போது வேண்டாம். 'ஸ்பீடா மீட்ட'ரைப் பாருங்கள்! என் இரண்டு கரங்களுக்கும் 'ஸ்டியரிங்'கில் வேலை இருக்கிறது" என்றாள் பவானி.
"எப்படியாவது நாம் மலேயாவை அடைந்து விடுவதாக வைத்துக் கொண்டாலும் நம் வாழ்க்கை அங்கேயும் நிம்மதியின்றித்தான் தொடரும் பவானி! "இங்கே ஸி.ஐ.டி.களுக்குப் பயந்து வாழ்ந்தோமென்றால் அங்கே ஜப்பானியர்களின் குண்டு வீச்சுக்கு அஞ்சி வாழும்படி இருக்கும்."
"இதற்கு அது எவ்வளவோ மேல். இங்கே நீங்கள் மறுபடியும் சிறைப்பட்டால் தனிமையை