(Reading time: 8 - 15 minutes)
Irulum oliyum
Irulum oliyum

பாட்டிக்கு அந்தச் சாமர்த்தியம் அபாரமாக அமைந்திருந்தது. திறந்த வாய் மூடாமல் பாட்டை ரகுபதி ரஸித்தான் என்று கூறினாள். மனம் சரியில்லாமல் ரகுபதி விழா மண்டபத்துக்குள்ளே பெரும்பாலும் நிற்கவில்லை. இடையிடையே ஸரஸ்வதி அபூர்வ சங்கதிகளைப் பாடும் போதோ, ஆலாபனம் செய்யும்போதோதான் அவன் சற்று நின்று அவைகளை ரஸித்தான். பாதிக் கச்சேரியில், மனக் கோளாறினால் ஏற்பட்ட அயர்வைத் தாங்காமல் காரியதரிசி யிடம் பொறுப்பை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான். ஒன்றுக்குப் பத்தாகப் பேசுவது சிலருடைய இயல்பு. கண்ணால் கண்டதை வெளியிடவே சிலர் தயங்குவார்கள்.

பொங்கிவரும் அழுகையைச் சமாளிக்க முடியாமல் சிறிது நேரம் திகைத்துப்போய்க் கண்களில் பெருகும் நீருடன் உட்கார்ந்திருந்தாள் சாவித்திரி. ஒரு க்ஷணம் அவளுக்கு கணவனிடம் கோபித்துக்கொண்டு வந்ததே தவறோ என்று கூடத் தோன்றியது. 'தவறு என்ன? நான் அங்கே இருக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்?' என்று சற்று உரக்க வாய்விட்டுப் பேசிக்கொண்டாள்.

"என்ன சொல்லிக் கொள்கிறாயடி அம்மா?" என்று கேட்டுக் கொண்டே பேத்தியின் அருகில் வந்து நின்று அவள் முகத்தை உற்றுக் கவனித்தாள் பாட்டி. பிறகு, "நன்றாக இருக்கிறதே நீ இப்படி மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கிறது? இப்படி அழுதால் உடம்புக்கு ஆகுமாடி சாவித்திரி? அசடுதான் போ" என்று கூறினாள்.

இவர்கள் இருவரின் பேச்சையும் சற்றுத் தொலைவில் மேஜை அருகில் உட்கார்ந்து காலேஜ் பாடங்களை எழுதிக்கொண்டிருந்த சீதா கவனித்தாள். பாட்டியின் அநுதாபத்தைக் கண்டதும் அவளுக்குக் கோபம் பற்றி எரிந்தது. ’இல்லாததையும், பொல்லாததையும் வந்து சொல்லிவிட்டு இப்பொழுது என்ன இழையல் வேண்டி யிருக்கிறது' என்றுதான் சீதா கோபம் அடைந்தாள். ஆகவே, அவள் சாவித்திரியைச் சிரிக்க வைப்பதற்காகப் பாட்டியைப் பார்த்து. "ஏன் பாட்டி! பாட்டைக் காதால்தான் கேட்பார்கள். அத்திம்பேர் திறந்த வாய் மூடாமல் எப்படிப் பாட்டைக் கேட்க முடியும்?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டாள்.

"அடி அம்மா! நீ இங்கே இருக்கிறதை நான் பார்க்கவே இல்லையே. ஒன்றும் பாதியுமாகப் போய் உன் அம்மாவிடமும், அண்ணாவிடமும் கலகம் பண்ணி வைக்காதே. நான்பாட்டுக்கு எங்கேயோ விழுந்து கிடக்கிறேன். நீ சண்டையைக் கிளப்பி விடாதேடி அம்மா. உனக்குப் புண்யம் உண்டு!" என்று பாட்டி சீதாவைப் பார்த்து.

"ஆமாம். . . . . . ஆமாம். . . . . .பாட்டி, இதையெல்லலாம் நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்! அதான் இவ்வளவு வக்கணையாகச் சொல்கிறாள். அதைக் கேட்டுவிட்டு நீயும் அழுகிறாய்!" என்று சாவித்திரியைக் கேலியாகப் பார்த்துக் கொண்டு கூறினாள் சீதா.

One comment

  • Savithri manam thirunthi kanavanidam sella vendum (y) :clap: nice epi (y) :thnkx: & :GL: eagerly waiting 4 next epi. :-)

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.