(Reading time: 5 - 9 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 34 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 34. பிரார்த்தனை

பொழுது விடிந்தால் ஸரஸ்வதி ஊருக்குப் புறப்பட வேண்டும். மைசூர் ராஜ்யத்தில் பல இடங்களில் அவள் கச்சேரிகள் நடைபெற்றன. கோபாலதாஸர் அக்கறையுடன் அவளைக் கவனித்துக் கொண்டார். அதிகமாகப் புகழும், பொருளும் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையைவிட, கலை மூலமாக - நாதோபாஸனையின் மூலமாக-- உள்ளத்தைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆசைதான் ஸரஸ்வதியிடம் மேலோங்கி இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் காலையிலேயே ஸரஸ்வதி கோபாலதாஸருடன் சாமுண்டிமலைக்குப் புறப்பட்டாள். பனி போர்த்த மைசூர் நகரம் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. 'சிலு சிலு' வென்று நடுக்கும் குளிரில், ஸரஸ்வதி காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு மலைக்குப் புறப்பட்டு விட்டாள். மலை அடிவாரத்தை அடைந்ததும் கோபாலதாஸர் அவளைக் கனிவுடன் பார்த்து, "குழந்தை! உன்னால் மலை ஏற முடியுமா? இல்லாவிடில் 'டாக்ஸி' வைத்துக் கொள்ளலாமா?" என்று கேட்டார்.

"வேண்டாம் மாமா! மெதுவாக நடந்து இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே போகலாம். நாம் யந்திர யுகத்தில் வசிப்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே. தெய்வ சந்நிதானத்தில் கூடவா நம் அவசரத்தைக் காண்பித்துக் கொள்ள வேண்டும்?' என்று கூறிப் படிகளின் வழியாக ஏற ஆரம்பித்தாள்.

மைசூர் நகரம் அமைதிக்கு இருப்பிடம். அங்கு அமைதியாகப் பெருகி ஓடும் காவிரியே அதற்குச் சாட்சியாக விளங்குகிறாள். நவராத்திரிகளில் கோலாகலம் நிரம்பியிருக்கும் இந்த அழகிய நகரத்தில், மற்ற நாட்களில் அமைதியைக் காணலாம். மலை மேல் உயர்ந்து நிற்கும் கோபுரத்தைப் பார்த்ததுமே ஸரஸ்வதியின் உள்ளம் சிலிர்த்தது. ஜகன்மாதா என்று அழைக்கப்படும் தேவி இங்கு ரௌத்ராம்சத்தில் வீற்றிருக்கிறாள். தாயின் அன்பில் கோபத்தையும், கண்டிப்பையும் காணமுடிகிறதே. அப்படி லோகமாதாவின் அன்பிலே கோபம் பொங்கி வழிகிறது. ’அதர்மத்தைப் பொறுக்கமாட்டேன்' என்று கர்ஜித்து கோரரூப மெடுத்து அதைச் செயலிலும் காட்டி இருக்கிறாள் ஈஸ்வரி.

சந்நிதியின் முன்பு கூப்பிய கரங்களுடன் ஸரஸ்வதி நின்றிருந்தாள். கண்களிலிருந்து அருவிபோல் நீர்பெருக, "ஜய சங்கீத ரஸிகே!" என்கிற சியாமளா தண்டக ஸ்லோகத்தில் ஒரு வரியைத் திருப்பித் திருப்பி வாய்க்குள் பாடிச்கொண்டாள் அவள்.

"உன்னத லட்சியங்களுக்கு இருப்பிடமாகவும், மனத் தூய்மையுடனும், உன்னிடம் மாறாத பக்தியைச் செலுத்துபவளாகவும் என்னை வைத்திரு. தாயே!" என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்தாள் ஸரஸ்வதி.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.