(Reading time: 10 - 19 minutes)
Muthu Sippi
Muthu Sippi

துண்டுகளை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

  

பவானி பார்வதியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரம் அங்கிருந்த யாருமே பேசவில்லை. பனியன் கூடப் போடாமல் வெற்றுடம்பாக அறையில் நிஜாருடன் உட்கார்ந்திருந்தான் பாலு. காய்களை நறுக்கி முடித்ததும் அரிவாள் மணையை ஒருபுறமாக வைத்துவிட்டுத் திரும்பிய பார்வதியின் கண்களில் பாலுவின் விலாப்புறம் தெரிந்தது. வரி வரியாக விசிறிக் காம்பால் அடித்த அடிகள் அங்கே அந்தப் பொன்மேனியில் கன்றிப்போய்த் தென்பட்டன. ஒரு மகவுக்காகத் தவமிருந்த அந்தப் பெண் உள்ளத்தில் வேதனை நிரம்பியது. பச்சைப் பாலகன், ஒன்றும் தெரியாத வயசு. இப்படி அடியும் உதையும் வாங்க அந்தக் குழந்தை செய்த தவறு தான் என்ன என்று நினைத்துப் பார்வதி கண் கலங்கினாள். புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள், "பவானி! குழந்தையை அடித்தாயா?" என்று கேட்டாள்.

  

கல்யாணராமன் அப்பொழுது தான் பாலுவைக் கவனித்தார். வரிவரியாகத் தெரிந்த அந்த அடிகளைப் பார்த்ததும் அவர் பவானியை ஏறிட்டுப் பார்த்தார். அந்தப் பார்வையில் பிள்ளையைப் பெற்று விட்டால் மட்டும் போதாது. எப்படி வளர்க்க வேண்டும் என்றும் தெரிந்து இருக்க வேண்டும் எனும் பாவம் தொனித்தது. வயசான அத்தம்பதி தன்னை ஒரு தினுசாகப் பார்ப்பதை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தாள்,

  

"ஆமாம் மாமி. பாலுவை அடித்து விட்டேன். ஊரார் சொன்னதை நீங்கள் கேட்டிருந்தால் நான் அடித்தது சரியா தவறா என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்" என்றாள் பவானி.

  

”ஊரார் என்ன சொல்லி விட்டார்கள் பவானி? தகப்பன் இல்லாத பிள்ளை என்று தானே சொன்னார்கள். வாஸ்தவம்தானே அம்மா அது ? வாசு இருந்திருந்தால் பாலுவை நீ இப்படி அடித்திருப்பாயா?" என்று கேட்டார் கல்யாணம்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.