நல்ல இடமாகப் பார்த்துக் கல்யாணம் பண்ண வேண்டும். தகுந்த இடத்தில் அவளை ஒப்புவித்து விட வேண்டும் என்றெல்லாம் சுவாமிநாதன் மனத்தில் ஓயாமல் நினைத்துக் கொண்டிருந்தவர். வாயைத் திறந்தும் பல முறைகள் சொல்லி இருக்கிறார். கண் இமைப்பதற்குள் ராதாவுக்குக் கல்யாணம் நிச்சயமாகி விட்டது. அடுத்த பத்து தினங்களுக்குள் அவளுக்குக் கல்யாணமாகி விடும். ஆனால் ராதா, மாமியார் வீடு என்று போகத் தேவை இல்லை. மூர்த்தி அவர்களுட னேயே இருந்து விடுவான் என்றெல்லாம் சுவாமிநாதன் நினைத்துக் கொண்டார். ராதாவும் அவர் கணவனும் தன்னுடனேயே இருப்பார்கள் என்பதில் அவருக்கு பரம திருப்தி.
"பலகாரத்தைச் சாப்பிடுங்கள்" என்று உபசரித்தார் சுவாமிநாதன்.
ஹாலில் அவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் பவானி, டாக்டர் ஸ்ரீதரனைப் 'போனில்' அழைத்தாள் அவர் அவசரமாக எழுந்து உள்ளே சென்று தம் கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டார்.
நாகராஜன் வீட்டிலிருந்து ' போன்' வந்திருக்கிறது. சுமதிக்கு ஜுரமாம். பவானிதான் 'போன்’ பண்ணியிருக்கிறாள். நான் அப்படியே இன்னும் சில நோயாளிகளைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்று கூறி, மூர்த்தியிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார் டாக்டர்.
'பவானி' என்கிற பெயர் மூர்த்தியின் மனத்தில் ஒரு வித அதிர்ச்சியைத் தந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த காப்பியை பாதி அப்படியே வைத்துவிட்டுச் சிறிது யோசித்தான். சென்னை நகரிலே எத்தனையோ பவானிகள் இருப்பார்கள். இதென்ன பைத்தியக்காரத் தனம் என்றுகூட அவன் நினைத்தான். இருந்தாலும் அந்தப் பெயர் அவன் மனத்தில் ஒருவித அச்சத்தையும் சலனத்தையும் உண்டாக்கியது.
செல்வமும் சீரும் நிரம்பிய இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஏதாவது தடங்கல் நேர்ந்து விடுமோ என்று அஞ்சினான் மூர்த்தி.
"என்ன, யோசனை பலமாக இருக்கிறது?" என்று கேட்டுக் கொண்டே ராதா அவன் அருகில் வந்து நின்றாள். சுவாமிநாதன் ஏதோ அலுவலாக எழுந்து உள்ளே சென்று விட்டார்.