“ஐயே! சும்மா இருடி அம்மா. நீ போடுகிற கூச்சல் எட்டுத் தெருவுகளுக்குக் கேட்கும் போல் இருக்கிறதே. இதற்குத்தான் இங்கே நான் வருகிறதில்லை..." என்பாள். சுமதிக்கு இவளுடைய நாணத்தைப் பார்த்து மேலும் இவளை நையாண்டி செய்யத் தோன்றும்.
”வந்தால் என்னவாம்! எங்கள் பாலு என்ன, நீ பயப்படும்படியாக அவ்வளவு மோசமாகவா இருக்கிறான்? செக்கச் செவேல் என்று ராஜா மாதிரி அவனும் அவன் கிராப்பும்! போடி பைத்தியக்காரி. வீண் வேஷம் போடுகிறாய்"
இவர்கள் பேச்சை ஒன்றுவிடாமல் ரசிப்பான் பாலு. மெதுவாக பூமி அதிராமல் மென்னடை போட்டுக் கொண்டே சற்று முன் வந்த சுந்தரியின் முக லாவண்யத் தில் அவன் தன்னையே மறந்திருப்பான். உலகத்தில் எவ்வளவோ பெண்கள் இருக்கிறார்கள். அவனுடன் எத்தனையோ பெண்கள் படிக்கிறார்கள் இப்படி ஒரு மென்மை, இம்மாதிரி ஓர் அடக்கம், இம்மாதிரி ஓர் அழகு அவர்களிடத்தில் அவன் காணவில்லை . காதல் கொண்டு கல்யாணம் செய்து கொள்ளும் வயதை அவன் பூராவாக அடைந்திராவிடிலும் அவன் மனத்தே அரும்பி இருக்கும் அந்தக் காதல் நாளடைவில் மலர்ந்து மணம் வீசினால் போதும் என்று தான் அவன் நினைத்தான். அதை அந்த புனிதமான காதலை அவன் அம்பலப்படுத்த விரும்பவில்லை. தன் இதயத்துள் வைத்துப் பூட்டிப் பாதுகாக்கவே விரும்பினான்.
ஜெயஸ்ரீக்குத் தன் பாட விஷயமாகப் பல சந்தேகங்கள் எழும். பாலுவைக் கேட்டால் விளக்கித் தருவான் என்பதும் தெரியும். இருந்தாலும் கேட்பதற்குத் துணிச்சல் இருக்காது.
”சுமதி! இதைப்பற்றி நீயே கேட்டுச் சொல்லி விடேன்" என்று சுமதியைத்தான் தொந்தரவு செய்வாள் அவள். ”ஏனோ அம்மா! உங்கள் இருவருக்கும் நடுவில் நான் வக்காலத்து வாங்க வேண்டு மாக்கும் ஊஹும்! முடியாது நீதான் கேட்க வேண்டும்?" என்று கூறி இருந்த இடத்தை விட்டு அசைய மாட்டாள் சுமதி.
இதற்குள் பவானி வீட்டில் இருந்தால்... "எங்கே அம்மா வந்தாய் ஜெயஸ்ரீ?" என்று விசாரிப்பாள்.
”நீங்கள் சும்மா இருங்கள் அத்தை. அவளுக்குப் பாலுவிடம் ஏதோ பாடம் கேட்க வேண்டுமாம்!"