Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 39 - சரோஜா ராமமூர்த்தி
2.39. முத்துச்சிப்பி
ரயிலில் பவானியும், ராதாவும் உட்கார்ந்திருந்தார்கள். நானும் மதுரை செல்வதற்காக அன்று அதே ரயிலில் பிரயாணப்பட்டேன். எழும்பூர் ரயில் நிலையத்தில் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் ஒரு சிறு கூட்டம் என் பெட்டியின் அருகில் வந்து நின்றது. தூய வெள்ளை ஆடை உடுத்திய இரு பெண்கள் வண்டியில் ஏறிக்கொண்டார்கள். நடுத்தர வயதை உடைய ஒருத்தி மங்கலத்தை இழந்தவள் என்பதை அவள் நெற்றியே எனக்குக் காட்டி விட்டது. இன்னொருத்தி இளம் பெண்: வந்திருந்த கூட்டம் குதூகலமாகச் சிரித்து அவர் களுடன் பேசியது . சுருண்ட கேசமும் அகன்ற விழிகளும் உடைய வாலிபன் ஒருவன் நடுத்தர வயதினனான பெண் மணியிடம், "அம்மா அடிக்கடி கடிதம் போடு" என்று கேட்டுக் கொண்டான்.
”அத்தை ! திரும்பவும் நீங்கள் சமீபத்தில் இங்கு வராவிட்டால், நான் பசுமலைக்கே வந்து விடுவேன்" என்று ஒரு பெண் பயமுறுத்தினாள்.
”பவானி! கல்யாணராமனையும், பார்வதியையும் நாங்கள் மிகவும் விசாரித்ததாகச் சொல் அம்மா" என்று தம்பதி இருவர் கேட்டுக் கொண்டனர். டாக்டரைப் போல் தோற்றமளித்த பெண்மணி ஒருத்தி. பவானி யிடம் ஒரு புத்தகத்தை அளித்தாள். 'ஆசிய ஜோதி' என்னும் தலைப்பு புத்தகத்தின் மீது அழகாக அச்சிடப் பட்டிருந்தது. அவள் இடுப்பில் இருந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை, உலகத்தின் இன்பங்களை-யெல்லாம் தன் பொக்கை வாய்ச் சிரிப்பால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
சென்னையில் பிரபல டாக்டரான ஸ்ரீதரன் தம் மகளுடன் காரிலேயே ரயில் நிலையத்துக்குள் அவசரமாக வந்தார்.
"என்ன அம்மா ! நீங்கள் எந்த மட்டும்?" என்று அன்னை விசாரித்தார்.
”மதுரைக்குப் போகிறேன்..." என்றேன்.
”அப்போது உங்களுக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்து விட்டது" என்றார் அவர். வண்டிக்குள் உட்கார்ந்திருந்த இரு பெண்களையும் பார்த்து.