(Reading time: 13 - 26 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

ஏண்டி ஆள் இல்லாத வீட்டுக்குள்ள போய் அடாவடியா இரும்புக் கம்பிய பிடுங்கற? இன்னும் என்னல்லாம் திருடினியோ? கோணிப் பைய திறந்து காட்டுடி. ஒன்ன மாதிரி திருடிங்கள், நடுரோட்டுல நிக்க வைச்சுச் சுடணும்."

   

எதிர்வீட்டம்மா, பேச்சோடு நிற்கவில்லை. ஐம்பது வயதிலும் அந்த இருபது வயதுக்காரியை வீழ்த்த முடியும் என்ற உறுதியோடு, சரோசாவின் கோணிப்பையை பறிப்பதற்காக கையை நீட்டினாள். உடனே சரோசா கோணி மூட்டையை உடம்புக்கு முன்னாலும் பின்னாலும், தலைக்கு மேலும் கீழும் அங்குமிங்குமாய் ஆட்ட, எதிர்வீட்டம்மா, அது சுற்றிய சுற்றுக்கு ஏற்ப, கைகளை ஆகாயத்தில் துழாவ... அந்தக் கிழமும், இந்த இளமும் குச்சுப்புடி டான்ஸ் ஆடுவது போல் இருந்தது. அக்கம்பக்கத்து பங்களா ஜன்னல்களில் முகம் பதித்து நின்ற கண்கள், வாய்களையும் அகலமாக்கின. ஆனால், கண்கள்தான் தெரிந்தனவே தவிர, கால்கள் தெரியவில்லை. அவை எதிர்வீட்டு அம்மாவுக்கு ஆதரவாக வெளியே வரவும் இல்லை.

   

பங்களா பொம்மனாட்டிங்களோட பயந்த கண்களைப் பார்த்த சரோசாவுக்கு, லேசாய் தைரியம் வந்தது. 'கெய்விக்கு’ நெத்தியடி கொடுத்தாத்தான், குயிக்கா போகலாம். 'இல்லாங்காட்டி' வம்புதான். சரோசா அவளை அடிக்கப் போவது போல், கையை ஓங்கியபடியே, கத்தினாள்:

   

“ஏய்... கெய்வி, நெஞ்சுல கீற மஞ்சாஞ் சோறு பிஞ்சிடும் பிஞ்சு. நானு இரும்புக் கம்பிய பொறுக்கறத பாத்தியாமே?"

   

"அடிப்பாவி! இரும்புக் கம்பிகள, சிமெண்ட் தூண்களை உடச்சி, கோணி மூட்டைக்குள்ள போட்டத நானே பார்த்தேன்! சீ ... ஒனக்கு எதுக்குடி சேல? ஒனக்கு எதுக்குடி ஜாக்கெட்டு?"

   

“நீ இந்த வயசுல பிரா போடும் போது, நானு சின்னப் பொண்ணு சிங்காரிக்கப்படாதா? நல்ல நினைப்புமே உனக்கு. நானு பாவம் நாலு வீட்ல பேப்பர்ங்க பொறுக்கி கோணிக்குள்ள பூட்டு போய்க்கினே கீறேன். நீ இன்னடான்னா என்னப்போய் திருடின்னு சொல்ற?”

   

"அப்படின்னா, கோணிய திறந்து காட்டேண்டி..."

   

"ஏய்... கெய்வி, மரியாதியா அந்தாண்ட போ. இல்லாட்டி நடக்கறது வேற. அந்த வீட்டு, 'பிச்சாத்து', இரும்புக் கம்பிய பிச்சா என்னமே? வழி விடுறியா... இல்ல ஒத தின்னுறியா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.