Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 26 - சு. சமுத்திரம்
பாக்கியம்மா, கால்களை குலுக்கிக் குலுக்கி நடக்கவிட்டு வீட்டுக்குள் வந்தபோது, வெளியே சட்டைப் பட்டன்களைப் போட்டபடியே புறப்பட்ட கணவன் சுப்பையாவை, உள்ளுக்குள் தள்ளினாள்.
"பாவி மனுஷா! ஒம்ம புத்தியாலதான், நான் நாயிகிட்டயும், பேயிகிட்டயும் சீரழியறேன். ரமணன் அண்ணாச்சிய உடனே வரும்படி, டெலிபோன் செய்யும்."
'ஒரு காலு ஒரு ரூபாய். கவர்மெண்டு சிக்கனத்தக் கடைபிடிக்கச் சொல்லி இருக்காங்கோ. நானே போயி கூட்டிக்கிட்டு வாறேன். ஏன் இப்படி தங்குதங்குன்னு குதிக்கிறே?”
‘அதையாவது தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே. முதல்ல சொன்னதச் செய்யுங்க. டெலிபோன்ல நான் சொன்னேன்னு ரமணன் அண்ணாச்சிய வரச்சொல்லுங்க.”
“ஏன், நான் சொன்னேன்னா வரமட்டாரோ?”
“என் தலைவிதி, ஒம்ம மாதிரி லூசு மனுஷன கட்டி, பயித்தியக்கார மவனப் பெத்து சீரழியறேன். இன்னுமாய்யா, டெலிபோன் பண்ணல?"
சுப்பையா, மிரண்டுபோய் டெலிபோன் இருக்கும் அறைக்குள் போனார். நாளை நடைபெறவுள்ள நிச்சயதாம்பூலத்திற்கு கதாநாயகியாகும் செல்லமகள் மல்லிகா, அம்மா போட்ட கூச்சலில் மிரண்டு போய் தன்னைப் பிடிக்கவில்லை என்று பிள்ளை வீட்டார் சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகம் எழ, பதில் கூச்சல் போட்டாள்:
“எனக்குத் தெரியும் இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு. நேத்து நீ போட்ட சத்தத்திலேயே அவரு பயந்து ஒருமாதிரி ஆயிட்டாரு."
"இந்த வீடே ஒரு பயித்தியக்கார ஆஸ்பத்திரி. ஒனக்கு இப்பவே புருஷனப் பத்தின அவ்வளவு அக்கறை. எனக்கு வாய்ச்ச இடிச்சபுளி மாதிரி ஒனக்கு வாய்ச்சிடப்பிடாதேன்னு எனக்கு அக்கறை. யோவ் பாவி மனுஷா, டெலிபோனை ஏய்யா, தோளுல வச்சிக்கிட்டு பித்துப்பிடிச்சி நிக்குறீங்க? டேய் இளங்கோ, நில்லுடா. அப்படியே நில்லு, ஒரு ஒடி நகரப்படாது."
இளங்கோ, குளியலறையில் இருந்து வெளிப்பட்டு, அப்படியே நின்றான்.
"ஏண்டா முளைச்சி மூணு இலை விடல, பெத்தெடுத்த தாய்கிட்டயே நாடகம் போட்டுட்டியே. எதுக்குடா அந்த சேரி ரவுடி என்ன ஆள்வெச்சு அடிச்சத என்கிட்ட சொல்லல? அதுக்குப் பிறகும் அவளுக்கு ஒன் ஆபீசுலயே வேலை வாங்கிக் கொடுத்திருக்கே. அப்பதான் அவள் பழையபடி ஒன்ன அடிக்கமாட்டான்னு நினைக்கிறியா? நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? ஒங்கப்பன் புத்திதானே ஒனக்கும் இருக்கும்.”
பாக்கியம்மா, மேலும் அடுக்கிக்கொண்டே போயிருப்பாள். அதற்குள் மிஸ்டர். ரமணன் அவசரத்தில் லுங்கி பனியனோடு வந்தார். அவருடன் பாமா ஆபீஸ் மேக்கப்போடு வந்தாள். பாக்கியம்மா, அவரிடம் முறையிட்டாள்:
"தப்புப் பண்ணிட்டியளே அண்ணாச்சி, தப்புப் பண்ணிட்டியளே. இந்தப் பயல அந்த சேரி ராட்சசி ஆளு வச்சு அடிக்சிருக்காள். அத அந்த தட்டுவாணி
தட்டுவாணி ருக்குமணி ஆக்ஸிடெண்டுன்னு சொல்லிட்டாள். நீங்களும் நம்பிட்டியளே, மோசம் போயிட்டியளே."
மிஸ்டர் ரமணன் திடுக்கிட்டார். இந்தம்மா எதுக்காக, தான் ஏதோ தப்பு செய்தமாதிரி குதிக்கிறாள்? வாட் இஸ் திஸ்?
“என்னம்மா நடந்தது? படபடக்காம சொல்லுங்க. எந்தப் பிரச்சினைக்கும் ஒரு முடிவு உண்டு. எந்த முடிவுக்கும் ஒரு பிரச்சினை உண்டு."
“நான் பெத்த பிள்ளைய ஏன் பெத்தோம்னு ஆயிட்டுதே அண்ணாச்சி. இவன், தன்ன ஆளு வச்சி அடிச்ச அரக்கிக்கு, அவள் காலுல விழறதுமாதிரி வேலையும் வாங்கிக் கொடுத்து, ஒங்களையும் என்னையும் காலால இடறிட்டானே."
“விவரமா சொல்லும்மா, நானிருக்கேன். சொல்லுங்கோ! படபடப்பு கூடாது. மிஸ்டர் சுப்பையா, என்ன இது? இந்தச் சமயத்தில வெளியில போகப் பார்க்கிறீங்களே, உட்காருங்கோ."
பாக்கியம்மாவால் நின்றுகொண்டு பேச முடியவில்லை. சோபா செட்டில் உட்கார்ந்தாள். அருகில் உட்கார்ந்த மல்லிகாவின் தோளில் கையைப் போட்டபடியே, பூக்காரி வீட்டில் நடந்தவற்றை விவரித்தாள். அதேசமயம், அங்கே தான் பேசியதை 'எடிட்' செய்து தன்னை நாகரீகமாகவும், அப்பாவியாகவும் காட்டிக்கொண்டு, சரோசா பேசியதை கொஞ்சம் பொய் கலந்து ஒப்பித்தாள். பிறகு, ரமணனிடம் முறையிட்டாள்.
“என் தர்மப்பிரபுவ - அதான் இந்த அப்பாவிப் பயல - கொலை செய்யப்போன அந்த சேரி முண்டைய இப்பவே போலீசுல பிடிச்சுக் குடுக்கணும் அண்ணாச்சி. உடனே உங்க ஆபீஸர் ஆளுக்கு போன் போடுங்க அண்ணாச்சி. ஏண்டா இளங்கோ, இப்பவே நீயும் டெலி போன்ல பேசி அவா வேலையை நிறுத்தலைன்னா, நான் ஒனக்குத் தாயும் இல்ல, நீ எனக்கு மவனுமில்ல. ரமணன் அண்ணாச்சி, ஏன் பேசமாட்டேங்கிறீங்க?"
இப்போது ரமணனின் முகம் விறைப்பானது. மகள் பாமாவையே பார்த்தார். உடனே அவள், முந்தானையை அது அத்துப் போவதுபோல் எடுத்து கண்ணைத் துடைத்துக் கொண்டு தள்ளாடி எழுந்தாள். பிறகு கம்பீரமாக நின்றாள். வாசலுக்கு வெளியே போய் நின்றுகொண்டு, நீதிபதியின் தீர்ப்புக் குரலில் பேசினாள்:
"வாங்க டாடி. இனிமேல் இந்த வீட்டுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை. எப்போ நான் மலையா நம்பின ஒருத்தர், என்கிட்ட எதுவுமே சொல்லாமல், என்னை முட்டாளாக்கினதா தெரிஞ்சுதோ, அதுக்குப் பிறகும் உறவு வச்சுக்கறது நம்ம சுயமரியாதைக்கி சரியா வராது. நான் சுயமரியாதைக்காரி. நாளைக்கி அந்த சேரி கேர்ள் என்னையும் அடிப்பாள். இவரு அதுக்காகவே அவளுக்கு வேலையில பிரமோஷன் போட்டுக் கொடுப்பார். ஒருதலை நம்பிக்கை ரொம்ப மோசம். டாடி! இன்னுமா அந்த வீட்டுக்குள்ள இருக்கீங்க? உங்களுக்கு சுயமரியாதை இல்லியா?"
ரமணன், தனது சுயமரியாதையை நிரூபிக்க எழுந்தார். எவரையும் திரும்பிப் பார்க்காமலேயே வாசலுக்கு வெளியே வந்தார். பாமா அவரை இழுத்துக்கொண்டு போவது தெரிந்தது. இளங்கோ பல்லைக் கடித்தான். கடைசியில் இந்த சரோசா, நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்ச கதையா ஆகிட்டுதே!
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.