அதுவரை அமைதியாகப் பொறுத்துக் கொண்டிருந்த சர்மா சிறுகுழந்தை போல் விசும்பி விசும்பிக் கோவென்று கதறியழுதார்.
"கொடுத்தவச்ச மகராசி! வெள்ளிக்கிழமையும் அதுவுமாப் பார்த்துப் பூவும் குங்குமமுமாப் போய்ச் சேர்ந்துட்டா?" - என்று கிருஹப் பிரவேசத்துக்கு வந்திருந்த பட்டினத்து வாத்தியார் தம் உதவியாளரின் காதருகே மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ரவிக்குக் கண் கலங்கியது. கமலி, வசந்தி எல்லாருமே வாய்விட்டு அழுது விட்டார்கள்.
துளசி மாடத்தில் அந்தக் குடும்பத்தின் குலவிளக்கான புராதனமான சொர்ண தீபம் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த போது, கிருஹ தீபமாக விளங்கிய காமாட்சியம்மாள் ஏதோ வீட்டுக்கு மருமகள் வந்ததும் அவளிடம் சொல்லிக் கொண்டு போவதற்காகவே காத்திருந்தது போல் போய்ச் சேர்ந்தாள். வசந்தி கமலியின் காதருகே மெல்லச் சொன்னாள்: - "மாமி உங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போகணும்னே காத்துண்டு இருந்த மாதிரின்னா இருந்துட்டுப் போயிட்டா?"
கமலியால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. மேலும் வாய்விட்டு விசும்பி அழத் தொடங்கி விட்டாள் அவள்.
"அழாதேடி! கமலி! நீ ரவியைக் கல்யாணம் பண்ணிண்டு உங்க நாட்டோட போயிடுவியோங்கறது தான் சதா மாமியோட கவலையா இருந்தது. உங்கிட்ட என்ன சொன்னா மாமீ?"
"நான் இங்கேயே இருந்து குடும்பம் நடத்தி இந்தத் துளசி பூஜையை விடாமப் பண்ணணும்னு என்னிடம் வாக்கு வாங்கிக் கொண்டு அந்தத் தங்க விளக்கை எடுத்துக் கொடுத்தாள்." -
"பின்னே என்ன? மாமிக்குக் குடுத்த வாக்கைக் காப்பாத்து! அந்தத் துளசிச் செடி வாடாமையும், விளக்கு அணையாமையும் பார்த்துக்கோ" - என்று உணர்ச்சி பொங்கும் குரலில் கமலிக்குப் பதில் சொன்னாள் வசந்தி.
சங்கரமங்கலத்தில் பொழுது நன்றாக விடிந்து சூரியனின் கதிரொளி கோவில் கோபுரக்