(Reading time: 6 - 11 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 21 - சு. சமுத்திரம்

ல்லிகா, ஒரு வாரம் நர்சிங் ஹோமிலேயே இருந்தாள். அப்பாவுக்கு, ஜூஸ் பிழிந்து கொடுத்தும், கால்களைப் பிடித்துவிட்டும், கைவிரல்களை நெட்டி முறித்தும் கவனித்துக் கொண்டாள். மாலை வேளையில், அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக் கொண்டு அருகே இருந்த பூங்காவிற்குப் போனாள்.

  

சொக்கலிங்கம் தேறிக் கொண்டே வந்தார்.

  

அந்த ஒரு வார காலத்தில், சரவணன், இரண்டு தடவை வந்தான். முதலில் வரும்போது, “இந்தா... நீ சொன்னது மாதுரியே... அப்பா டிராப்ட் போட்டிருக்கார். ஸ்டாம்ப் இருக்கிற இடத்தில் கையெழுத்துப் போட்டு வைத்துக்கோ...” என்றான். ‘நீங்க’வை, அவன் ‘நீ’யாக்கியதில் மல்லிகா, தானும் அவனும் ஒன்றானது போல, சிரித்தாள்.

  

மேலும் ஓரிரு நாட்கள் விடைபெற்றன.

  

வாழ்க்கையில் இருந்து விடைபெறாத அளவிற்கு நன்றாகத் தேறிய சொக்கலிங்கம், நர்சிங் ஹோமிலிருந்து விடைபெறும் நாள் வந்தது. செட்டியார் காரும், வந்து நின்றது.

  

பார்வதி, மல்லிகாவிற்கு தலைவாரி, பின்னலிட்டாள். இரட்டைப் பின்னல். கண்ணுக்கு மையிட்டாள். தண்டையார்பேட்டையில் வாங்கிய, நைலக்ஸ் புடவையை கட்டாயப்படுத்தி, கட்டிக் கொள்ள வைத்தாள். மல்லிகாவிற்கு, தியாகராய நகர் வீட்டை நினைக்கவே ஆனந்தமாக இருந்தது. எப்போது போவோம் என்பது போல், அவசர அவசரமாக பிளாஸ்டிக் கூடையை எடுத்து வைத்தாள். அப்பாவின் சூட்கேசை தூக்கி டிரைவரிடம் கொடுத்தாள். ‘தியாகராய நகர் போனதும், ‘ஷவர் பாத்’தில் குளிக்க வேண்டும்! டன்லப் பில்லோ கட்டிலில் படுத்துப் புரள வேண்டும்! டி.வியைப் போட்டு, கிரிக்கெட் மேட்சைப் பார்க்க வேண்டும்! என்ன... இந்த அப்பா... இன்னுமா... டாக்டரிடம் பேசிக்கிட்டு இருக்கிறார்.

  

பெருமாளும், மனைவி மக்களோடு வந்து விட்டார். பரமசிவம் பயல் மட்டும், மாமாவை சங்கடத்துடன் பார்த்தான். கால் மணி நேரத்தில், குடித்தனப் பெண்களும் வந்து விட்டார்கள். கந்தசாமியின் மனைவி, கண்ணீர் விட்டுக் கொண்டே வந்தாள். யாரது... அடடே... இட்லி ஆயாவா...

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.