பிள்ளையார், மகளுக்குக் குரல் கொடுத்தார். வயதுப் பெண் ஒருத்தி, தனது திருமணத்தைப் பற்றி - அது நிச்சயிக்கப்பட்ட பிறகும் மறைமுகமாகக் கூட பேசக்கூடாது என்று நினைப்பவர். அது என்ன எந்த வீடு... மகள் அப்படிப் பேசியதில் கொதித்துப் போய் ஆவியானார்.
“என்னழா... வாய் ரொம்பத்தான் நீளுது... நூலப் போலச் சேலையாம். தாயைப் போல பிள்ளையாம்...”
தாய்க்காரி வெள்ளையம்மா, புருஷனுக்குப் பதிலடி கொடுக்க அதே விகிதாச்சாரத்திலான, வார்த்தைகளைத் தேடினாள். இதற்குள், மரகதம் அடங்கிவிட்டாள். அந்த அதட்டல் குரல் தனக்கும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்த கோமளமும், லேசாய் வெளிப்பட்ட நாக்கைக் கூட உள்ளே இழுத்துக் கொண்டாள். மரகதம் வாயளவில் அடங்கினாலும் மனத்தளவில் வீறிட்டாள். கடந்த ஒன்பதாண்டு காலத்தில் முதல் மூன்று மாதங்களை மட்டும் ‘போனஸாக’ விட்டுவிட்டு, அண்ணிக்காரி, சொல்லுக்குச் சொல் ‘அடுத்த வீட்டுக்குப் போறவள்’ என்று இடித்து இடித்துச் சொல்கிறாள் - இவள் என்னமோ இதே வீட்டில் பிறந்ததிலிருந்தே இருப்பவள் போல... இருபத்திரண்டு ஆண்டுகளாக எந்த வீட்டில் பிறந்தாளோ, நடமாடுகிறாளோ, அந்த வீட்டிலிருந்து, ஒரு ஒன்பது வருஷக்காரி, துரத்தப் பார்ப்பதைக் கண்டு மரகதம் மருண்டு போனாள். அந்த வீட்டிலிருந்து அந்த ஊருக்கு ‘அது’ எப்படிப் பட்டதாக இருந்தாலும், போய்த் தொலைய வேண்டும் என்ற விரக்தி.
இப்போது ஆறுமுகப் பாண்டி தம்பியை உசுப்பினான்.
“சீக்கிரமாகச் சட்டையைப் போடுடா... இப்ப புறப்பட்டாத்தான், பஸ்ஸப் பிடிச்சு, ரயிலைப் பிடிச்சு சாயங்காலத்துக்குள்ள போக முடியும்...”
சுயம்பு கையெடுத்துக் கும்பிட்டுப் புலம்பினான்:
“என்னால எதுவும் செய்ய முடியலே அண்ணே... என்னக் காப்பாத்து அண்ணே. எனக்கு படிப்பும் வேண்டாம் கிடிப்பும் வேண்டாம். வயலும் வேண்டாம். வாசலும் வேண்டாம்... உன் காலடியே போதும்...”