இங்க சேர்த்தான். பைத்தியக்காரப் பயல். அந்தக் காண்ட்ராக்டரு என் காதைக் கடிச்சபோது... நான்தான் ஐயாயிரமா கொடுக்கும்படிச் சொன்னேன். இந்த குட்டை இப்பதான்யா போட்டு உடைக்கேன்...”
“எய்யா. எய்யா. எங்க வம்சம் கொத்தனாரையும், சித்தாளையும் மட்டுமே கொடுத்து வந்த வம்சம்யா! அந்த வம்சம் தழைக்க இவன் பிறந்திருக்கான்யா. தர்மப் பிரபுவே. கருணை காட்டு. இவனத் திருப்பி அனுப்னிங்கன்னா, என் வீட்டுக்காரி தாங்கமாட்டாய்யா... ஏற்கெனவே என் மகளை அவள் அண்ணன் மகனுக்குக் கொடுக்கலன்னு ஆடிப்போயிருக்காள். என் பிள்ளைகள் அவளுக்குக் கொள்ளி போட வச்சிடாதீங்க அய்யா...”
பதிவாளர் உருளை நாற்காலியில் அங்குமிங்குமாய் நெளிந்தார். திடீரென்று ஆறுமுகப் பாண்டி எழுந்தான். உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தரையோடு சேர்த்து இழுத்துப் போட்டான். சிறிது பின்னுக்கு நடந்தான். பிள்ளையாரும், பதிவாளரும் பயந்துபோய் எழுந்தபோது அப்படியே தொப்பென்று விழுந்தான். நீச்சலடிப்பதுபோல் கைகளை ஊன்றி, ஊன்றி நகர்ந்து மேஜையின் அடிவாரக் கட்டைகளுக்கு மேலே கையைப் போட்டு, பதிவாளரின் கால்களைத் தேடித் தேடி, தேடியதைப் பிடித்துக்கொண்டு புலம்பினான். "கருணை காட்டுங்க சார்... கருணை காட்டுங்க... பிச்சிப்பூவை பிக்கறது மாதிரி பிச்சிடாதீங்க சார்... அய்யா... தர்மராசா...” என்று அரற்றினான்.
பதிவாளர் ஆடிப்போனார். வெளியே ஒரு சின்னக் கூட்டம் கதவுகளுக்கு இடைவெளி கொடுத்து எட்டிப் பார்த்தது. பதிவாளர், அவர்களைப் பார்த்து ‘கெட்அவுட்’ என்று கத்தி தனது இயலாமைக்கு வடிகாலை ஏற்படுத்தினார். பிறகு இன்டர்காமில், வி.ஸி.யிடம் ஆங்கிலத்தில் பேசினார். அடுத்த முனையில் ஒரு கத்தல் வந்தது; இந்த முனையில் இருந்த பிள்ளையாருக்கும் அதன் உக்ரம் சுட்டது. பேசி முடித்த பதிவாளர் உதட்டைப் பிதுக்கியபடியே பேசினார்.
“காலேஜ் எலெக்ஷனக்கூட போலீஸ் வெச்சு நடத்த வேண்டிய காலம் இது. கள்ளச்சாராயம் காச்சுறவன்கூட படிக்கிற காலம் இது. இந்த சிலந்திவலைக் காலத்துல, ஒங்க பையன் எப்படியோ சிக்கிட்டான்... ஐயாம் ஸாரி. இந்தாம்மா அந்த சர்டிபிகேட்களை கொண்டு வாம்மா. பெரியவரே... அந்த காகிதத்துல ஒரு சின்னக் கையெழுத்து போடுறீங்களா... சுயம்பு நீயும் போட்டுடு. மிஸ்டர் ஆறுமுகப் பாண்டி எழுந்திருங்க... என்னால செய்ய முடிஞ்சது ஒங்க தம்பிய போலீஸ்ல ஒப்படைக்கப் படுறதைத் தடுத்ததுதான்...”