என்னடா இதெல்லாம்...”
ஆறுமுகப் பாண்டி, சுயம்புவை லேசாய் தள்ளிவிட் டான். அவனோ, தனது தோழர்களைப் பார்த்தான். உள்ளே இருக்கும் இதயத்தைக் காட்டுவதுபோல், உதடுகள் பிரிந்தன. கண்ணிர் பார்வையை மங்கடித்தது. கண்களைத் துடைக்காமலேயே அந்த அறையை விட்டு வெளியேறினான். மீண்டும் திரும்பி வந்து, தான் தடம் போட்ட இடத்தைப் பார்த்தபடியே நின்றான். பிறகு கீழே ஒரே ஓட்டமாய் ஓடினான். ஒவ்வொரு அறையிலும் மூவிரண்டு ஆறு கண்கள். நீர் சொரியவில்லையானாலும், நிம்மதியற்றுத் தவித்தன. ஒரு அறையில் கண்ணதாசனின் ‘பாடிச் செல்லும் பறவைகளே’ என்ற பாடல் வேண்டுமென்றே ஒரு சோகப் பகிர்வாக டேப்பில் ஒலிக்க விடப்பட்டது.
ஆறுமுகப் பாண்டி, கையிலிருந்த டிரங்க் பெட்டியைத் தலைக்கு மாற்றி அதை முன் பக்கமாய் சிறிது சாய்த்து, தமது கண்ணிரை மறைக்க முயற்சி செய்தான். எந்தப் படிகள் வழியாய் ஏறி, தம்பியைப் பார்க்கவும், பணம் கொடுக்கவும் வருவானோ, அந்தப் படிகளில் இனி ஏற முடியாது என்ற எண்ணத்தில் அவன் கலங்கியபோது, அவன் கண்ணீரும் கன்னத்தில் இறங்கியது.
இந்த மூவரும் தங்கள் பாட்டுக்கு நடந்தார்கள். ஆங்காங்கே விடுதிகளின் வெளிப்பகுதிகளில் ஏதோ சொந்த அறையில் துக்கம் நடைபெற்ற தோரணையில் நின்றவர்களைப் பார்க்காமலே தந்தையும் பெரிய மகனும் நடந்தபோது, சுயம்பு அவர்களைப் பார்த்துக் கையாட்டினான். அவர்களின் இதயத்தையே இழுத்துப் போடுவது போன்ற ஒரு அப்பாவிக் கையாட்டு. அதனால் உடம்பு எல்லாம் ஆடிப்போய் அந்த மாணவர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.
விருந்தினர் விடுதிப் பக்கம் வந்ததும், சுயம்பு நின்றான். அதோ, அந்த டீலக்ஸ் கட்டிடத்தில்தான் டேவிட்... என் டேவிட் இருக்கார்... நான் படும்பாடும்... பட்ட பாடும் அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ...
அப்போது அங்கே வந்த மூர்த்தியின் காதில் ரகசியம் பேசுவதுபோல் பேசிவிட்டு, சுயம்பு ஓடினான். அனைத்தையும் அதிர வைக்கப் போவதுபோல் ஓடி, டேவிட்டின் திறந்த வாசல் வழியே உள்ளே போனான். சிறிது சந்தோஷப்பட்டான். டேவிட் மட்டுமே தனியாய் இருக்கார்.
உருண்டு திரண்ட வாலிபால் களையோடு, எகிறி எத்திய உருளைக் கால்களோடு ஓங்கி,