(Reading time: 6 - 12 minutes)
Vata malli
Vata malli

கோபம். உடம்பெல்லாம் ஒரே ஆட்டம். அவனுக்குள், தான் மட்டுமே பிறந்து, தான் மட்டுமே தனித்து இருப்பது போன்ற கொடுமையான கொடூரம்.

  

சுயம்பு மீண்டும் வீறிட்டான். எல்லோருக்கும் இப்போது கேட்டது. அக்கம் பக்கமே ஒட்டுமொத்தமாய் அங்கே வந்தது. குடிசையை இடித்துக் கொண்டு வருவது போன்ற ஒரு கூட்டம். எல்லோரும் பதைபதைத்தபோது, ஒரு இருபது வயதுக்காரி அவன் பக்கத்தில் போனாள். மற்றவர்கள் பயந்து போய் நின்றபோது, அவள் அவனைத் தோளோடு சேர்த்துப் பிடித்தாள். “ஒன்ன மாதிரிதாண்டி நானும் பத்தாவது படிச்சவள். மாடி வீட்ல வாழ்ந்தவள். நமக்கு இனிமே யாருமே கிடையாதுடி... ஒருத்தருக்கு ஒருத்தர்தான் ஆறுதல்டி... நானும் இங்க வந்தப்ப ஒன்ன மாதிரிதான் தவிச்சேன்... அதனால சொல்லுகிறேன், நல்லது செய்யாததை நாளு செய்யும் தங்கச்சி... அழாதே... வீட்ல போய் அழுதாலும் பார்க்கதுக்கு கண்ணு வராது. கேக்கிறதுக்குக் காது கிடைக்காது” என்றாள்.

  

சுயம்பு ஆவேசம் சிறிது குறைந்து அந்தப் பத்தாவது வகுப்புக்காரியின் முட்டிக்கால்களில் முகம்போட்டு முட்டினான். மோதினான். சிலதுகள், கஷ்டப்பட்டுப் போனதால் அந்தக் கஷ்டமே ரசனையாக சிரித்தன. துக்கத்தை மூளை மாற்றிய ரசாயனச் சிரிப்பு... இதற்குள் பச்சையம்மாள் வந்துவிட்டாள். ‘என்னடி, என்னடி’ என்று சொல்லிக்கொண்டே சுயம்புவை மடியில் கிடத்தினாள். பிறகு “அழாதடி... நீ அழுகிறத பார்த்துட்டு நான் ஒன்ன கடத்திட்டு வந்ததா நினைப்பாளுகடி... ரிக்ஷா மணியோட கையைக் காலப் பிடிச்சு... லாண்டரிகாரருக்கு துணி துவைச்சுக் கொடுத்து நாளைக்கே ஒன்ன வேணுமுன்னா, ஒன் வீட்லய விட்டுடறேன். அழாதே! அழப்படாதுடி” என்றாள். பிறகு, “போங்கடி போங்க. என் மவள கொஞ்சநேரம் என்கிட்டய விடுங்க” என்றாள்.

  

எல்லோரும் போய்விட்டார்கள். அவர்களோடு போகப் போன ஒரு காலத்துப் பத்தாவது வகுப்புப் பயலை சுயம்பு காலைப்பிடித்து இழுத்தே பக்கத்தில் வைத்துக் கொண்டான். பச்சையம்மாள் கேட்டாள்.

  

எதுக்காக அழுதே என் மகளே... தாய்கிட்ட மறைக்கப்படாதுடி.”

  

ஆமா... சுயம்பு... இவங்களுக்கு நீ மகளா வந்தது ஒனக்கு ஒரு அதிர்ஷ்டம். எனக்கும் இருக்காள ஒருத்தி... கார்ல போறவங்கள பார்த்து மட்டும் கண்ணடிக்கணுமாம்...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.