பிள்ளையார் பெமூச்சு விட்டார். முத்துவுக்கு முழுசும் புரிந்தது. ஆறுமுகப்பாண்டிக்கு அரைகுறையாகத் தெரிந்தது. பிள்ளையார் பெருமூச்சை முடித்துக் கொண்டே கேட்டார்.
“அப்போ என் மகன் சுயம்புவைத் திருத்தவே முடியாதா...”
“திருந்த வேண்டியது நாமதான்.”
ஆறுமுகப்பாண்டி மனதிற்குள் மனைவி அழுத்திய சுமையை, கண்களை அவை கலக்கும்படி, வைத்துக் கொண்டு, ஒரு சந்தேகம் கேட்டான்.
“டாக்டர் தம்பி, இது பரம்பரை நோயா. தம்பிக்கு வந்தது அண்ணனுக்கும் வருமோ?”
“கிடையவே கிடையாது... அலிகளுக்குக் குழந்தை பெறுகிற தன்மையே கிடையாது. இது முளைக்கும் போதே சாவியாப் போகிற விதை நெல்லு மாதிரி. குஞ்சு இல்லாத கூமுட்டை மாதிரி.”
ஆறுமுகப்பாண்டி சிறிது நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது, முத்து கேட்டான்.
“அப்போ ஆம்பளை, பொம்புளையா மாறுறது, பழனியம்மா, பழனியப்பனா மாறுனது, எப்படி?”
“அலித்தன்மை வேறு. பாலின மாற்றம் வேறு. அலி அலிதான். குழந்தை பெறவும் முடியாது. தரவும் முடியாது. திடீரென்று பெண்ணாய் மாறுகிறவர்களை அலின்னு தப்பா நெனைக்கோம்... பொதுவா மானிடத்தை ஆண் பெண் என்று பார்ப்பதே தப்பு: ஆண் தன்மை அதிகம் உள்ளவங்க, பெண் தன்மை அதிகம் உள்ளவங்க என்றே பார்க்கணும். ஒவ்வொரு ஆண்கிட்டயும் பெண் தன்மை உண்டு. ஒவ்வொரு பெண்கிட்டயும் ஆண் தன்மை உண்டு. முழு ஆண், முழுப் பெண்ணுன்னு கோடு கிழிக்க முடியாது. ஏன்னா பெண்ணின் முட்டையும் ஆணின் உயிர்த்திரளும் சேர்ந்ததே மானுடம். ஆண்தன்மை ஒரு கட்டத்துல அதிகரிக்கும்போது அதுக்கு உட்படுற பெண் ஆணாகவும், பெண்தன்மை முற்றும்போது, ஆண் பெண்ணாகவும் மாறலாம். ஆனால், அலியாக முடியாது. அலித்தன்மை, மானுடத்தின் மூன்றாவது குலம்...”