அன்று ஞாயிற்று கிழமை. எப்படியும் அவனும் அவன் மனைவியும் வீட்டிலே தான் இருப்பார்கள் என்று தோன்றியது. ஒரு முடிவுடன் அவன் வீட்டிற்கு கிளம்பினாள் அபர்ணா.
அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள் அபர்ணா.
கதவை திறந்தவன் அவனே.
ஒரு நொடி அவன் முகம் மலர்ந்தே போனது.
கண்களில் தெறித்துகொண்டிருந்த கோபத்துடன் வீட்டினுள் நுழைந்தாள். '
எங்கே உன் wife? நான் அவங்களை பார்க்கணும்.
எதுக்கு?
அவங்களுக்கும் உன்னை பத்தி, நீ எனக்கு பண்ண துரோகத்தை பத்தி தெரியணுமில்லையா அதுக்குதான்.
ஒரு பெருமூச்சுடன் அவள் முகத்தை ஆராய்ந்தவன், நிதானமான குரலில் சொன்னான். 'பெட் ரூம்லே இருக்கா போய் பாரு'
விறு விறுவென படுக்கை அறைக்குள் நுழைந்தவள் அப்படியே நின்றுவிட்டிருந்தாள் அபர்ணா.
அங்கே இருந்தது ஒரு ஆளுயர கண்ணாடி. அது அபர்ணாவின் உருவத்தை அப்படியே பிரதிபலித்தது.
சில நிமிடங்கள் தலை முதல் கால் வரை மின்சாரம் பாய்ந்தது போல் அப்படியே நின்று விட்டிருந்தாள். என்ன சொல்கிறான் அவன் 'நான்தான் அவன் மனைவி என்றா?'
மெல்ல நடந்து வெளியே வந்தாள் அபர்ணா. மெது மெதுவாய் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவளின் கண்களை மெல்ல ஆராய்ந்தான் பரத்.
கண்களில் நீர் கோடுகள் சேர கேட்டாள் 'அப்ப உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு பொய் சொன்னியா பரத்?.
'ஆமாம். பொய்தான் சொன்னேன்' என்றான் அழுத்தமாக.
சட்டென்று நிமிர்ந்தாள்
'அன்னைக்கு ரயிலிலே என்னை பார்த்தப்போ முதல் கேள்வி என்ன கேட்டே? கேட்டான் பரத்.
'உனக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்டேன்'
'அதுதான்' என்றான் பரத். 'அது எப்படி அபர்ணா முடிவு பண்ணே நான் உன்னை விட்டுட்டு வேற பொண்ணு கூட வாழ்ந்திடுவேன்னு? நீ கேட்ட அந்த கேள்வியையே என்னால் தாங்கிக்க முடியலை. அதனாலேதான் கல்யாணமாயிடுசுன்னு பொய் சொன்னேன் ' அவன் கண்களில் படர்ந்த தீவிரம் அவளை உலுக்கியது.
இல்லை பரத் 'அன்னைக்கு ட்ரெயின்லே நீ ஒரு பொண்ணோட .......
அவ யாருன்னு தெரியுமா உனக்கு? என் கூட வேலை பார்க்கிற பொண்ணு. வேறொருத்தர் கூட அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு.
திடுக்கிட்டு போனாள் அபர்ணா.
அய்யோ ஸாரி பரத், நான் ஏதோ தப்பா புரிஞ்சுக்கிட்டு.....
''அதுதான். அதுதான்.' என்றான் குரலில் ஏறிய உஷ்ணத்துடன்
நீ மட்டுமில்லை, இந்த நாட்லே முக்கால் வாசி பேர் இப்படிதான். ஒரு ஆம்பிளையும் ,பொம்பளையும் பேசிட்டிருந்தா போதும் உடனே லவர்ஸ் தான் கண்ணை மூடிட்டு முடிவு பண்ணிட்டு, கேவலமா ஒரு பார்வை பார்க்க வேண்டியது. ஏன் அவங்களுக்கு நடுவிலே வேற எதுவுமே இருக்க முடியாதா என்ன ?
மெல்ல தலை குனிந்துக்கொண்டாள் அபர்ணா.
ஏன்? அவங்க அண்ணன், தங்கையா இருக்கலாம், அக்கா தம்பியா இருக்கலாம், நல்ல friendsஸா இருக்கலாம். இப்படியெல்லாம் யோசிக்கிறதே இல்லை.
'மத்தவங்களை விடு இத்தனை நாள் என்னோட பழகிட்டு எப்படி அப்பு என்னை அப்படி நினைச்சே.?' கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
சாரி பரத் நான்......
'போடி.......... 'என்றான் பரத் சந்தேகபட்டா பொண்ணுங்களுக்குதான் வலிக்குமா? ஆம்பிளைகளுக்கு வலிக்காதா?
இல்லை பரத்.....
'என்னாலே இப்போ உன்னை மன்னிக்க முடியாது. எனக்கு எப்போ உன்னை மன்னிக்கணும்னு தோணுதோ அப்போ நானே உன் வீடு தேடி வருவேன். இப்போ கிளம்பு' உறுதியான குரலில் சொல்லிவிட்டு, கண்களை மூடிக்கொண்டு சோபாவில் சாய்ந்துகொண்டு அமர்ந்துவிட்டிருந்தான் பரத்.
இரண்டு நாட்கள் கடந்து விட்டிருந்தது. அவள் அழைப்புகளை துண்டித்துக்கொண்டேதான் இருந்தான் பரத்.
அன்று மாலை, என்னை மன்னிக்கவே மாட்டாயா? என்று மனதிற்குள்ளே கெஞ்சியபடி அவள் தன் வீட்டிற்குள் நுழைந்தபோது அப்படியே நின்றுவிட்டிருந்தாள் அபர்ணா.
எப்படி அவள் வீட்டை கண்டுபிடித்தானோ? வெற்றிலை பாக்கு தட்டு முன்னால் இருக்க தன் பெற்றோருடன் அவள் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் பரத்.
மகிழ்ச்சியில் திளைத்துப்போனபோனவளாய் அவனை நிமிர்ந்து பார்த்த நொடியில், சட்டென்று அவளை பார்த்து பரத் கண்சிமிட்ட, இனி, எந்த நிலையிலும் அவனை சந்தேக படுவதில்லை என்ற முடிவுடன் கண்களில் நீர் சேர அவனை பார்த்து புன்னகைத்தாள் அபர்ணா..