அந்த நாள்.. ஞாபகம்.. - ஷரோன்
“ டேய் அபி, அங்க ஒன்னும் பிரச்சன இல்லையே? “
தன்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த அபிஷேக்கை பார்த்து அறையின் வாசலில் நின்று கேட்டாள் அனிதா.
“ இல்ல அனி. இந்த பக்கம் எந்த பிரச்சனையும் இல்ல. வச்ச பொருள், வச்ச இடத்துல இருக்கு. ஆமா, வீரா இன்னும் வரலையா? “
“ ம்ம்.. வந்தான். நீ நம்ம ரூம்மோட லேப்ட் சைடு ரூம்ஸ் எல்லாம் செக் பண்ண போன மாதிரி, அவன் ரைட் சைடு ரூம்ஸ பாத்து வர அனுப்பி இருக்கேன் “ என்று திரும்பியவள், “ தோ, வந்துட்டான் பாரு. என்னடா வீரா? எல்லாம் ஒகே தானே? “
“ எல்லாம் ஒகே அனிதா. நோ ப்ரபளம் “ என்றான்.
மூவருமாய் தங்கள் அறையினுள் நுழைந்து, ஆளுக்கொரு இடமாக ஒவ்வொரு மூலையில் அமர்ந்துக்கொண்டனர்.
அனிதா, “ என்னடா அவன் வருவான்னு நினைக்குற? “
“ எனக்கு நம்பிக்கை இல்ல அனி. நம்ம அலர்டா இருப்போம்னு கண்டிப்பா அவனுக்குப் புரிஞ்சு இருக்கும். அதனால..” என்ற சொன்ன அபிஷேக்கை மேலும் பேசவிடாமல்,
“ ஏய் கண்டிப்பா வருவான் அனிதா. அவன் மட்டும் வரட்டும், அவன ‘கும் கும்’னு மொத்தனும். எனக்கு வர ஆத்திரத்துக்கு.. “ என்று வீர வசனம் பேசினான் வீரா.
“ நீயே இப்படி கோபப்பட்டா, நான் எப்படி கோபப்படனும் சொல்லு..போன வாரம் கீர்த்தி அவ திங்கிஸ் எல்லாம் திருட்டு போச்சுனு அழுறத பாத்துட்டு, ‘யார் எடுத்திருந்தாலும் குடுத்திடுங்க, இல்லான கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்’னு தெரியாம சொல்லிடேன். அதுக்கு என் கிட்டயே கை வரிசையைக் காட்டிடான். பாவி.. ” என்று புலம்பினாள் அனிதா.
“ ஆமா அனிதா. அதுவும் நீ லீடரா இருக்கும் போது இப்படி ஆகிடுச்சே “ என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றினான் வீரா.
“ ஹம்ம்..இத்தன வருஷத்துல இப்படி நடந்ததே இல்ல. நம்ம இத சும்மா விட கூடாது. அவனை கையும் களவுமா பிடிச்சே ஆகனும் “
இருவரின் மொக்கையை சகிக்க முடியாமல் அபி, “ எல்லாம் ஒகே. இப்படியே எத்தன நாளுக்கு நாம காவல் இருக்க போறோம்? “
இருவரும், “ அவன் கிடைக்குற வரை ”
‘கிழிஞ்சுது டா’ என்று எண்ணிக்கொண்டான்.
தொடர்ந்து ஒர் பேரமைதி.
இப்படி மூவரும் கூடி காவல் இருக்கும் இடம் அவர்களது வகுப்பறை. அவர்கள் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள். பள்ளியாண்டு விழாவிற்கான கலை நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் அறையை விட்டு சென்ற பின்னர் அவர்களின் பென்சில், பேனா, ரப்பர், ஸ்கேச் பக்ஸ் போன்ற அதி முக்கியமான பொருட்கள் தொலைந்து போவதால், அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், இந்த வகுப்பின் கிலாஸ் லீடர் அனிதா, அவளின் உயிர் தோழன் அபிஷேக் மற்றும் அசிஸ்டண்ட் லீடர் வீரா.
அனிதாவின் இந்த தீடீர் ஈடுபாடுக்கு முக்கிய காரணம், அவள் நேரடியாக பாதிக்கப்பட்டதே ஆகும். அவள் கீர்த்திக்காக மிரட்ட, அடுத்த நாள் அவளது பேக்கையே அபேஸ் செய்திருந்தனர். ஒருவழியாக காரிடாரின் ஒரு மூலையில் அந்த பேக் கண்டெடுக்கப்பட்டது. எனினும் அதில் இருந்த பென்சில் பாக்ஸ், அவளுக்கு பாக்கெட் மணியாக கொடுக்கப்பட்ட 2 ரூபாய் என்று அனைத்தும் திருடப்பட்டிருந்தது. அழுகை ஒரு புறம், கோபம் ஒரு புறமாக கொதித்து போனாள் அனிதா.
அபி, “ அனிதா, அவன் ஆறடி உயரம் இருப்பானாம், ஆயம்மா பாத்ததா கிலாஸ்ல ஒரு பேச்சு இருக்கு ”
வீரா, “ ஏது… ஆறடியா…? “ என்று எச்சில் விழுங்கினான்.
“ என்னடா பயமாயிருக்கா? “
“ ஏய், எனக்கென்ன பயம். நான் ரெண்டு மாசமா கராத்தே கிலாஸ் போறவனாக்கும். வரட்டும் ஒரு கை பாத்திடுறேன். “
திரும்பவும் அமைதி.
அபி, “ இன்னொரு விஷயம் கேள்விப்பட்டியா அனி. காலைல வேன்ல வர பசங்க எல்லாம் சீக்கிரம் வருவாங்கல்ல. அவங்க நம்ம எதிர்க்க இருக்க building மாடில எதோ ஒரு பயங்கர உருவம் நடக்குறத பாத்தாங்களாம். அப்போ செம காத்து அடிச்சுதாம். ‘ஓ’ னு ஒரு சத்தம் வேற கேட்டுச்சாம் “
அனிதா, “ என்னது பேய்யா? ஏன்டா நீ வேற பயம்புடுத்துற? “
வீரா, “. நீ பயப்படாத அனிதா. எல்லாம் ரீல். உருவமாம், காத்தாம், சத்தமாம்..”
“ ஓ……” நிஜமாக இப்போது கேட்டது அந்த சத்தம். பயங்கர காற்று வீச தொடங்கியது.
“ என்ன அபி, நிஜமாவே சௌண்ட் கேக்குது..”
“ ஆமா அனி. என்னனு தெரிலையே. வீரா…. டேய் வீரா..” என்று இருவரும் திரும்பும் முன்னே அவன் ஓட தொடங்கியிருந்தான்.
“ டேய் நில்லுடா. நாங்களும் வரோம்..” என்று அனிதாவும் அபிஷேக்கும் அவன் பின்னே தொடர,
“ போங்கடா. இனி நான் வரமாட்டேன் உங்க கூட.. சாமி.. எது திருட்டு போனா எனக்கென்ன? பேய் கிட்ட மாட்டுனால் நான் காலி. அய்யோ பயமாயிருக்கே..” என்று நிற்க்காமல் கத்திக்கொண்டே ஓடியேவிட்டான்.
அன்று அவர்கள் ஓடியதை எண்ணி சிரித்துக்கொண்டு அங்கு நின்றிருந்தாள் அனிதா. இப்பொழுது அவள் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. School Alumni Meet –இல் கலந்துக்கொள்ள தனது கணவன் மற்றும் மகனுடன் வந்திருந்தாள்.
அவள் தன்னை மறந்து சிரிப்பதைக் கண்டு, அவள் தலையில் ஒரு தட்டு தட்டினான் அபிஷேக்.
“ என்ன மேடம்.. மலரும் நினைவுகளா? “
“ ஆமா அபி. ஒரு official call. அதான் பேச வந்தேன். இந்த கிலாஸை பார்த்ததும் அப்படியே நின்னுட்டேன். “
“ ஹா.. ஹா.. பக்கத்துல இருக்குற labல உள்ள instrumentsல காத்து புகுந்து வர சத்தத்தைக் கேட்டு பேய்னு ஓடுனதை தானா நினைச்ச? “
சிரிப்புடனே, “ அதே.. அதே.. சரி Mrs. அபி எங்க?
“ அதோ அங்க ஒரு லேடீஸ் அஸோசியேஷன் கூட ஐக்கியமாயிட்டாங்க மேடம். Mr.அனிதாவும், குட்டியும் எங்க?
“ அந்த கொடுமைய ஏன் கேக்குற.. அதோ அங்க உட்கார்ந்து Candy Crush விளையாடுராங்க அப்பாவும் மகனும். “
அதற்குள் அங்கு வந்த வீரா, “ ஹாய் , எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்? லாங் டைம், நோ ஸீ.. “ என்று தன் கைக்குழந்தையைத் தூங்க வைக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தான்.
“ அடடா.. வீரா. நாங்க நலம். நீ எப்படி இருக்க? உம் பாப்பாவா? தூங்கியாச்சா? “ என்று அவன் குழந்தையைக் கையில் வாங்கினாள் அனிதா.
“ நான் சூப்பர். உன்ன பத்தி கேள்விப்பட்டேன் அனிதா. ஆனால் டாக்டர் அபி, யு.எஸ் போயிட்டதா சொன்னாங்க “
“ ஆமா வீரா. இப்போ லீவுக்கு வந்தோம். நீ என்ன பண்ற?”
“ டெக்ஸ்டைல் பிசினஸ் “
இவர்கள் உரையாடல் தொடர, திரும்பவும் “ஓ….” என்ற சத்தம். காற்று பலமாக வீசியது.
திருதிருவென விழித்த வீரா, “ வாங்களேன், நாம அந்த பக்கம் போய் பேசலாம் “ என்றான்.
அபிஷேக்கும் அனிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, எவ்வளவு முயன்றும் முடியாமல் குபீரென்று சிரித்துவிட்டனர்.
ஒரு வழியாக சிரித்தொய்ந்த பின், இளநகையுடன் அனிதா,
“ அன்னைக்கே கேக்கனும்னு நினைச்சேன். உனக்கு யாருடா ‘வீரா’ னு பேர் வச்சது?????? “
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.