காயம் - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்
அப்போது எனக்கு வயது நான்கு. லீலாவிற்கு மூன்று. உகந்தான்பட்டியின் தைப்பூசத்திருவிழாவிற்கு அத்தையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அத்தை அனுப்பியிருந்த தபால் அட்டையை கண்டதிலிருந்து அம்மாவிற்கு ஒரே நடுக்கம். கடந்தமுறை திருவிழாவோடு அப்பவிடம் தலைக்காட்டத்தொடங்கியிருந்த குடிப்பழக்கம் கூட காரணமாயிருக்கலாம்.
துர்வாசமுனிவரின் குணம் கொண்ட அப்பாவிற்கு துர்போதனை செய்து தாத்தாவின் உறவை முறித்துக்கொண்டு ஆண்டுகள் இரண்டு இறந்திருக்கும். எனக்கும் லீலவிற்க்கும் தாத்தாவை பார்க்க ஆவல்.
அம்மாவின் முந்தானையை பிடித்திழுத்து "தாத்தா வீட்டுக்கு போவோமா? " என்ற லீலாவின் மழலை முகம் பசுமையான் ஞாபகம். உகந்தான்பட்டியின் செம்மண் சாலையில் கோடைவெயிலில் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு லீலா நடந்தாள் சாலையின் இருபுறமும் பரவியிருந்த கருவேல மரங்களையும் புள்ளினங்களின் சத்தத்தையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நடந்த என் முதுகில் ஓங்கி ஒரு அறை விழுந்தது. அது அப்பாவின் முரட்டு கரம்.
"முன்னாடி பார்த்து நட" என அப்பாவின் அதட்டலில் பயந்து கல்லில் இடறிய பெருவிரலில் இரத்தம் கசிந்தது. சத்தமிட்டு அழுவதற்கு பயம். அம்மாவின் மற்றொரு கையைப்பற்றிக்கொண்டு விசும்பலோடு நடந்தேன்.
திருவிழா முடியும் வரை அம்மா அடுப்படியில் தேய்ந்தாள். அப்பாவை சுற்றிவலம் வந்து தேய்த்துக்கொண்டிருந்தாள் கலா. அப்பாவின் முறைப்பெண். மற்றபடி முறைக்கெட்ட வாழ்வு அவளுக்கு. திருவிழாவில் வேலனாட்டம் பார்த்து பயந்த்திருந்த நானும் லீலாவும் உற்க்கம் பிடிக்காது போர்வைக்குள் உருண்டுக்கொண்டிருந்த்தோம்.
வானொலியின் சத்தத்தை அதிகரித்த அப்பா தனது ஆட்டத்தை தொடங்கினார். மேல்தட்டில் அடிக்கு பயந்து அங்குமிங்கும் ஓடிய அம்மாவின் சத்தம் வயிற்றை ஏதோ செய்தது. லீலா பொர்வைக்குள் விசும்பினாள். "சீமையக் கெடுத்த சிருக்கி, அம்மையக்காணும்னு அழுதயாக்கும், வாயமூடிட்டு தூங்கு" என அத்தையின் அதட்டலுக்கு பயந்து மௌனமாக அழுதோம்.
திருவிழா களைப்பில் இருந்த மாமாவிற்கு அம்மாவின் சத்தம் எரிச்சலை தந்தது. "அவன் கேக்கிறமாதிரி கையெழுத்து போட்டேனா இந்த அடி வாங்க வேண்டாம்ல" என படிகளில் நின்று கொண்டு கத்தினார். "நீ இரண்டையும் பொட்டையா பெத்துட்ட அவனுக்கு ஆம்பள புள்ள வேணும்னு நினைப்பு, இந்த கால்ததில குடிக்காதவன் கிடையாது, இரண்டாவது வச்சிகாதவன் கிடையாது" என்று அப்பாவின் சிந்தையில் விசத்தை தூவிவிட்டு நித்திரைக்கு போனார் அவர்.
அந்த கடுமையான இரவு முழுவதும் அம்மா தூங்காமல் விழித்திருந்தாள். விடிந்தும் விடியாததுமாக என்னையும் லீலாவையும் கூட்டிக்கொண்டு அதே செம்மண் சாலையில் நடந்தாள், அப்போதும் காலிடறி இரத்தம் கசிந்தது. நான் அழுதேன் நிச்சயமாக அது அம்மாவின் இரத்தக் காயங்களுக்காகதான்.
{kunena_discuss:785}