சிபி சக்ரவர்த்தி - சுபிவண்யா

கல்லூரி சென்றதும் எல்லோரும் `தொபுக்கடீர்`ன்னு காதலில் விழுவது போல நானும் விழுந்தேன். ஆனா யாரைக் காதலிக்கிறேன் என்றுதான் தெரியவில்லை. மல்லிகை சரம், ஆகாய நிற சுடிதார், கொழுசு சத்தம், லாவண்டர் மனம், கொத்துபரோட்டா என கண்ணில், கருத்தில்படும் யாவையும் காதலித்தேன். அப்படி எல்லாவற்றையும் காதலிக்க கத்துக் கொடுத்தவன் ``சிபி சக்ரவர்த்தி`` . அந்த பெயரைச் சொல்லும் போதே, பெத்தடின் ஊசி போட்டது போல் கிறுகிறுக்கும். நான் அவனை எழுத்துக்கள் வழியாக சந்தித்த நாள் அன்று, தேவ கன்னிகள் காதலை நுகர்ந்திருப்பார்கள்.
அது கல்லூரி சேர்ந்த பிறகு வந்த முதல் வெள்ளிக்கிழமை. பள்ளிப்படிப்புவரை மதிப்பெண்ணுக்காக கடிவாளம் இட்ட குதிரையாக ஓடிய எனக்கு, இப்போது சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்தது. பாரதியார் கவிதைகள் மட்டும் படித்து நல்ல (???) புள்ளையாக இருந்தவள், அன்று நூலகத்தில் எதேட்சையாக ஒரு வார பத்திரிக்கையை புரட்டிப் பார்த்தேன்.
``உன்னை காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னை காதலித்துவிடாதே.
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்கமுடியாது.``
என்ற வரிகள் மனதுக்குள் ரங்கூரமிட்டு அமர்ந்த நொடி, எனக்குள் இருந்த ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்ய ஆரம்பித்தன. எப்படி ஒருவனால் இப்படி வார்த்தைகளை சமைத்து கவிதை உருவாக்க முடியுமென கிறங்கினேன். அந்த மயக்கம் `சிபி`யின் புத்தங்களை தேடித் தேடிப் படிக்க வைத்தது. பார்ப்பதையெல்லாம் காதலிக்க சொன்னது.
ஒரு முகம் தெரியாதவனை ஒருவனை எனக்குள் உருவகப்படுத்தி, அவனை நேசித்து, அவன் என்னை நேசிப்பதாக கற்பனையில் வாழ்ந்தேன். அது எனக்கு டபுள் ஆக்டிங் காலம். என் மனது காதலன், காதலி என்ற இரு கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க வேண்டும். இடையிடையே கல்லூரி பாடங்களையும் கவனிக்க வேண்டும்.
விடுதி அறை தோழிகளோடு,பேசும் போதுதான் அவர்கள் இருவரும் சிபியின் கவிதை என்னும் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்ற வரலாற்றுச் சம்பவம் தெரிந்தது. பிறகென்ன, மலையும், மலைசார்ந்த இடத்தில் எங்கள் கல்லூரி இருக்க, நாங்களோ, ``சிபியும், சிபியின் கவிதையும் சார்ந்த இடத்தில் வாழ்ந்தோம்.
அந்த நாட்களில், எந்த வாரப்பத்திரிக்கை திறந்தாலும், சிபியின் கவிதையாக இருக்கும். தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும், கவிதை வரிகளை மனப்பாடமாய் ஒப்பிப்போம். எங்களுக்குள் யார் அதிகமாக கவிதையை நேசிக்கிறார்கள் என்ற போட்டியும், அவ்வப்போது முரண்பாடுகளும் வரும். பரிட்சை நேரமும் கவிதை, காதலென புலம்பி, அரியர் வைத்து வீட்டில் பரேடு நடந்தது தனிக்கதை.
என் தோழி வைதேகிக்கு அந்த கவிதை நாயகனையே திருமணம் செய்ய வேண்டும் என்ற பெரும் வெறி. படிப்பு முடிந்தபிறகு அப்பாவிடம் தன் விருப்பத்தை சொல்வதாக இருந்தாள். இன்னோரு தோழி காவ்யாவிற்கு அப்படியெல்லாம் எண்ணமில்லை. (வேறு சாதிக்காரராக இருந்தால்??? என்ற பிரச்சனை அவளுக்கு). நாம எப்பவுமே வித்தியாசமா சிந்திப்போம். என்ன செய்ய, நம்ம டிசைன் அப்படி(???).
இப்படி உருகி உருகி காதலை கவிதையாய் கொட்டும், சிபி, நிஜத்தில் யாரை காதலிப்பான், அந்த அதிர்ஷட தேவதை யார்? இருவருக்கும் இடையேயான காதல் எத்தனை அழகானது? என்பதைத்தான் என் கற்பனை குதிரை தேடும். அவள் மீது நான் பொறாமை கொள்ள தனிப்பட்ட காரணம் வேண்டுமா என்ன? நல்லவேளை, அவனின் முகவரி தேடி தெருதெருவாக நாங்கள் அலைவில்லை. எங்கள் பெற்றோர்கள் ஏதோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்
இப்படியாக எங்கள் நாட்கள் உருள, கல்லூரி கடைசி வருடம் , விளையாட்டாக பத்திரிக்கை ஒன்றிற்கு சிறுகதை எழுதி அனுப்பினேன். அது பிரசுரித்த ஆசிரியர் குழு என் எழுத்து நடை நன்றாக இருப்பதாக சொல்லி, தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்த, `ஃபிரிலான்ஸராக அப்பத்திரிக்கையில் வேலை பார்த்தேன். சிபியை முதன்முதலாக இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பத்திரிக்கை அதுதான். அதில் வேலை பார்ப்பதில் எனக்கு அப்படி ஒரு ஆனந்தம். ஒரு முறை சிபியின் கவிதை வந்த அதே வாரத்திலே என் கட்டுரையும் வந்திருந்தது. இருவர் பெயரையும் தாங்கிவந்த அந்த புத்தகம் என் வாழ்நாள் பொக்கிஷமானது.
படிப்பு முடிந்ததும், சென்னையில் அதே பத்திரிக்கையில் முழுநேர நிருபராக பணியில் சேர்ந்து சில மாதங்கள் கடந்திருந்த சமயம். இதுவும் ஒரு வெள்ளிக் கிழமைதான். என்னுடன் வேலை பார்க்கும் நிருபர் ஒருநபரை அழைத்து வந்திருந்தார். அந்த முகத்தை பார்த்ததும், ஏதோ நன்கு பரிச்சயமான உணர்வு. சட்டென அடையாளம் பிடிபடவில்லை.
``இவரு சிபி சக்ரவர்த்தி, கவிஞர், நம்ம பத்திரிக்கைக்கு நிறைய எழுதியிருக்கார், ` என்று எங்கள் நிருபர் சொன்னதும், அப்படியே ஜிவ்வென்று இருந்தது. சந்தோஷத்தில் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன. அவரிடம் பேசுவதற்கு லட்சக்கணக்கான வார்த்தைகள் என்னுள் முண்டியடிக்கிறது. எப்படி தொடங்கவென தெரியாமல் தவிக்க,
``எனக்கு கல்யாணம், அவசியம் உங்க பத்திரிகைலிருந்து எல்லோரும் வரணும்`` என்றார் சிபி. அந்த நொடி எனக்குள் ஓராயிரம் பூகம்பத்தை ஏற்படுத்தியது. அவர் தந்த பத்திரிக்கையை கூட வாங்காமல் அதிர்ந்து நின்றேன்.
நம் சந்திப்பு இப்படியா அமையவேண்டும், என் காதல்களின் சக்ரவர்த்தியே, உன்னை நான் காண்பது இவ்வாறா என ஓலமிட்டது என் மனது. இப்பத்தானே சந்தித்தோம், அதற்குள் என்ன அவசரம் உன் கல்யாணத்துக்கு?ன்னு உள்ளுக்குள் வாதாடினேன்.
``காதல் கவிதை எழுதி ஊரையே பித்துபிடிக்க வைச்ச மனுஷன் நீங்க, பெத்தவங்க பார்த்து நிச்சயம் பண்ண பொண்ணை கல்யாணம் பண்றீங்கன்னா அது அதிசயம் சார்`` என்றார் எங்கள் நிருபர்.
எங்கள் இருவருக்கும் பொதுவாக சிரித்த சிபியின் முகத்தில் லேசாக வெட்கம். எனக்கோ இனம் புரியாத ஏக்கம்.
`வர்றேங்க`` என்று அவன் தலையாட்டி சென்ற நொடி பேரிழப்பை உணர்ந்தேன். அன்றிலிருந்து நான் காதல் கவிதைகளை படிப்பதில்லை. ஏன் என்று உங்களுக்கு புரியுமென நினைக்கிறேன்.
`டியர் பிரெண்ட்ஸ், கடந்த ஒரு வருடமாக தினந்தோறும் சில்சியை வாசித்து வரும் எனக்கு , சில்சியில் இது முதல் கதை. வெளியிடும் `நிர்வாக குழுவுக்கு எனது அன்பான நன்றி.கள். கல்லூரி காலத்தில் தபூ சங்கர் என்றால் மிகவும் விருப்பம். பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு ஒருமுறை அவரை சந்தித்தேன். அந்த அனுபவத்தில் சில விட்டமின்களும், மினரல்களும் சேர்த்து கதையாக்கினேன். உங்கள் பொன்னான விமர்சனங்களை எதிர்நோக்கி!
அன்புடன் சுபிவண்யா
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.