"வண்டியை திருப்பு… திருப்பு… அவங்க நம்மளை பார்த்துட்டா.. இதே கேள்வியை நம்மகிட்ட கேட்பாங்க…"
"ஆமாமா… நாம திரும்பிடலாம். நம்ம கார் நிக்குதுல்ல அதுதான் மயூரி வீடு" என்று சொல்லி வண்டியை திருப்பினான்.
"பார்த்துட்டேன். மத்த விஷயங்களை நான் பார்த்துக்கறேன். ஆனால் அம்மாவிற்கு மயூயியிடம் என்ன வேலை?" மித்ரன் கேட்டான்.
சைத்ரனுக்கும் விடை தெரியாத அந்த கேள்விக்கான பதில் இரவு உணவின்போது கிடைத்தது. நால்வரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது பூரணி பேச ஆரம்பித்தார்.
"என்னங்க.. உங்களுக்கு அல்லூ மிஸ் நினைவிருக்கிறதா?"
"அதெப்படி மறக்கும். நம்ம கல்யாணம் அவங்களோட உதவியாலதான நடந்தது."
".ஆமாங்க… அவங்க மட்டும் அன்னைக்கு எனக்கு உதவலேன்னா நம்ம குடும்மமே இருந்திருக்காது."
"என்ன விஷயம்?. யார் அந்த அல்லூ மிஸ்" மித்ரன் குறுக்கிட்டான்.
"அவங்க என்னோட டீச்சர். அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கும் அவங்களை பிடிக்கும். என் கல்யாணத்தப்ப போட்றதா சொன்ன நகையை எங்க வீட்டுல போட முடியலை. கல்யாணமே நிக்க இருந்துச்சு. அப்ப இந்த அல்லூ மிஸ்தான் தன்னோட நகையை போட்டு எங்க கல்யாணத்தை நடத்தி வச்சாங்க"
"அதுக்காக அவங்க மேல இப்ப நிறைய கோபம் வந்திருக்குமே…" சைத்ரன் சொன்னான்.
"எதுக்குடா கோபப்படணும்.." பூரணி கேட்க,
"அவன் எங்கிட்ட சொல்லிகிட்டு இருக்கான். அவங்களால எனக்குதான கெட்டது நடந்துச்சு. அப்படினு சொல்றான்" ராம்குமார் குறுக்கிட்டார்.
"ஓ… சிரிச்சுட்டேன் போதுமா… என்ன குடும்பம் இது?. சீரியஸ்ஸா ஒரு விஷயத்தை சொல்ல வந்தால் ஜோக் அடிச்சுகிட்டு.." ,பூரணி கடுகடுத்தார். சைத்ரன் ஏதோ சொல்ல வாய் திறக்க,
"கொஞ்சம் அமைதியாக இரு. அம்மா என்ன சொல்ல வர்றாங்கனு கேட்கலாமே.." மித்ரன் சொன்னான்.