குழந்தைகள் ஸ்பெஷல் குட்டி கருத்துக் கதைகள் – 93. கிருஷ்ணரின் நாணயம்
ஒரு கிராமத்தில் ஒரு துறவி வசித்து வந்தார். அவர் கிருஷ்ணரின் சிறந்த பக்தர். மக்கள் அவருக்கு உணவு அல்லது பணம் கொடுத்தனர், துறவி அவர்களை ஆசீர்வதிப்பார்.
கிருஷ்ணர் துறவியை சோதிக்க முடிவு செய்தார்.
ஒரு நாள், துறவி ஆற்றங்கரையில் நடந்து சென்றபோது, ஒரு பை நிறைய தங்கக் காசுகளைக் கண்டார். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்த பையை எடுத்துச் செல்ல முடிவு செய்தார்.
வீட்டிற்குத் திரும்பும் வழியில் துறவி ஒரு பிச்சைக்காரனைக் கண்டார், பிச்சைக்காரன் அவரிடம் கொஞ்சம் உணவு அல்லது பணத்தைக் கொடுக்கும்படி கேட்டார். துறவி பிச்சைக்காரனுக்கு எதுவும் கொடுக்காது கூச்சலிட்டு துரத்தி விட்டார்.
துறவி தனது வீட்டை நோக்கி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது, வழியில், தரையில் ஒரு வைரம் மின்னுவதைக் கண்டார். முதலில் தங்கக் காசுகள், இப்போது வைரங்கள் இன்று அதிர்ஷ்டமான நாள் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். வைரத்தை எடுக்க அவர் குனிந்தவுடன், ஒரு திருடன் பின்னால் இருந்து குதித்து, தங்க காசு பையை எடுத்துக்கொண்டு ஓடினான்.
கீழே இருந்தது வைரமல்ல, கண்ணாடி துண்டு! துறவியை ஏமாற்றி தங்க காசுகளை எடுத்துச் செல்ல திருடன் போட்ட திட்டம் அது என்பது புரிந்து துறவி மனமுடைந்து போனார். அவர் தன் வீட்டை நோக்கி சோர்வுடன் தொடர்ந்து நடந்தார்.
கிருஷ்ணர் ஒரு சாதாரண மனிதனின் அவதாரத்தை எடுத்து துறவியை சந்திக்க முடிவு செய்தார்.
கிருஷ்ண பகவான் துறவியை வழியில் சந்தித்தார். கிருஷ்ணர் துறவியிடம் பழைய நாணயம் ஒன்றைக் கொடுத்து, தயவுசெய்து இந்த நாணயத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். துறவி கிருஷ்ணரிடமிருந்து நாணயத்தை எடுத்துக் கொண்டார், கிருஷ்ணர் அங்கிருந்து சென்றார்
துறவி கையிலிருந்த நாணயத்தை பார்த்தார். இதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? இந்த நாணயத்திற்கு எதுவும் கிடைக்காது என்று நினைக்கிறேன்.
வீட்டிற்குத் திரும்பும் வழியில், ஒரு மீனவர் தனது வலையில் இரண்டு மீன்களுடன் இருப்பதை துறவி கண்டார். துறவி மீனுக்காக பரிதாபப்பட்டார். அவர் மீனவவரை நோக்கி, இந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு, அதற்கு ஈடாக இந்த இரண்டு மீன்களை எனக்குக் கொடுங்கள் என்றார். மீனவரும் ஒப்புக்கொண்டார்.
துறவி மீன்களை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றார். நாளை மீனை ஆற்றில் விடுகிறேன் என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
மறுநாள் மீன்களை தண்ணீரில் விடுவதற்காக ஆற்றுக்குச் சென்றபோது, அவர் வியப்பில் வாய் பிளந்தார். தண்ணீரில் இரண்டு வைரங்கள் இருந்தன. துறவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார் ஆனால் இது எப்படி நடந்தது என்று அவருக்கு புரியவில்லை.
அவர் கிருஷ்ணரை மனதார வேண்டினார். கிருஷ்ணர் அவர் முன் தோன்றினார். துறவி சொன்னார், ஆண்டவரே, என்ன நடக்கிறது? நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன்.
கிருஷ்ண பரமாத்மா கூறினார், அந்த மீன்கள் ஆற்றில் இருந்தபோது தற்செயலாக வைரங்களை விழுங்கிவிட்டன. தங்கள் உயிரைக் காப்பாற்றியதற்காக அவர்கள் உங்களுக்கு பரிசாக வைரங்களைக் கொடுத்தார்கள்.
துறவி ஆனந்தக் கண்ணீருடன் கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்தார்.
கிருஷ்ண பரமாத்மா சொன்னார், உனக்கு ஒரு பை நிறைய பொற்காசுகள் கிடைத்தது. ஆனாலும் நீ பிச்சைக்காரனுக்கு உதவவில்லை. வைரத்தின் மீதான உன் பேராசையால், திருடனிடம் நாணயங்களை இழந்தாய். ஆனால் மீன்களுக்கு உதவியதும் வைரங்கள் உன்னை தேடி வந்தது. பேராசை கொள்ளாமல், பிறருக்கு உதவுவதை எப்போதும் நினைவில் கொள்.
துறவியும் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதாக கிருஷ்ணரிடம் உறுதியளித்தார்.
கருத்து:
பேராசை கொள்ளாமல் பிறருக்கு உதவ வேண்டும்.